'ராஜீவ் கொலை' கைதிகள் விடுதலை - மீண்டும் அடைக்கப்படும் 4 ஈழத் தமிழர்கள்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 31 வருடங்களாக சிறைத்தண்டனையை அனுபவித்த நளினி அவரது கணவர் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரொபேர்ட் பயஸ் ஆகியோர் இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சியவரான ரவிச்சந்திரனும் இன்று இரவுக்குள் விடுதலையாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய விடுதலைத்தீர்ப்பின் அடிப்படையில் அதன் பிரதி கையளிப்பபட்டு வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஐவர் விடுதலை
வேலூரிலுள்ள பெண்கள் தனிச் சிறையில் இருந்து நளினியும் மற்றும் வேலூர் சிறையில் இருந்து முருகன், சாந்தன் ஆகியோர் அவர்களுக்குரிய விடுதலை நடைமுறைகள் முடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
அதேபோல, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ் ஆகியோரும் விடுவிக்கப்பட்டனர்.
ரவிச்சந்திரன் மட்டும் தன்னுடைய சிறைவிடுப்பு நகலை ஒப்படைப்பதற்காக அருப்புக்கோட்டையிலிருந்து மதுரை சென்றிருப்பதால் அவரும் இன்று இரவுக்குள் விடுதலை ஆவார் என நம்பப்படுகிறது.
திருச்சி சிறப்பு முகாம்
இன்று விடுதலையானவர்களில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்த குடிமக்கள் என்பதால், அவர்கள் திருச்சி சிறப்பு முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைப்பட்டுள்ள இவர்களை, அவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்ல அனுமதிக்கவோ, விரும்பினால் இலங்கையராக பதிவுசெய்துகொண்டு தமிழ்நாட்டிலேயே வசிக்க அனுமதிக்கவோ அரசிடம் கோரப்போவதாக அவர்கள் தரப்பு சட்டவாளர்கள் அறிவித்துள்ளனர்.
முருகன், ஜெயக்குமார் ஆகியோர் இந்திய குடிமக்களை திருமணம் செய்துள்ளதன் அடிப்படையில், அவர்கள் இருவரும் இந்தியாவில் வசிக்க அனுமதி கோரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.