இலங்கைக்கு துரோகம்! இனவாதத்தால் துண்டாட முயற்சி - வெளிவரும் ரணிலின் பின்னணி
இலங்கையில் அழிக்கப்பட்ட இனவாதத்தை மீண்டும் தூண்ட சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக உத்தர லங்கா கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் இந்த முயற்சியின் பின்னணியில் வெளிநாட்டு அதிகார சக்திகள் இருப்பதாக கூட்டணியின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்தன தேரர் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தந்திர நடவடிக்கை

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தனித்து தாம் மாத்திரமே வேட்பாளராக களமிறங்க வேண்டுமென தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
சிறிய அரசியல் கட்சிகளை தமக்கு சாதகமாக்கிக் கொள்வதன் மூலம் எதிர்க்கட்சி தலைவரை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அகற்றலாம் என அவர் நினைக்கிறார்.
மக்கள் ஆணையின்றி அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தின் ஆதரவின்றி ஒருவருக்கு அதிபராக முடியாது.
இதனடிப்படையில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அவருக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கிறது.
சிறிலங்கா இராணுவத்தினரின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க தற்போது தந்திரமாக செயல்படுகிறார். அவரது இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் இருக்கும் ஒரே விடயம் அதிபர் தேர்தல்.
இலங்கைக்கு துரோகம்

வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கோரவில்லை. தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான தீர்மானத்தை ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டார். அவரது சுயநலத்துக்காக அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
தற்போது, அவர் மீண்டும் இலங்கையில் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கிறார். இலங்கையில் தற்போது இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அவர் காணிகளை மக்களுக்கு பிரித்து கொடுத்தால் அதில் எமக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை.
எனினும், இலங்கை வாழ் தமிழர்களுக்கு குறித்த இடங்களை வழங்காது புலம்பெயர் தமிழர்களுக்கு அவற்றை கொடுக்கிறார். இதன் மூலம் அவர் இலங்கைக்கு துரோகம் செய்கிறார் என்பதே உண்மை” - என்றார்.