இளைஞர்களின் கோரிக்கையை நானும் ஏற்றுக்கொள்கிறேன்..!
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் கோரிக்கையை தானும் ஏற்றுக்கொள்வதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (27) புறக்கோட்டையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இக்கட்டான சூழ்நிலையில் பதவியேற்றுள்ளேன்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "நாட்டின் சட்டத்திற்கு அமைவாக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனைவருக்கும் அனுமதியுள்ளது.
நாட்டில் ஆட்சி முறைமையை மாற்ற வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் கோரிக்கையாக இருந்தது. அதனை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.
நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த வேளையில் நான் பதவியேற்றுள்ளேன், பொருளாதார சவாலை முறியடித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பல நடவடிக்கைகளை தற்போது எடுத்துள்ளேன்", எனக் குறிப்பிட்டார்