ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில், லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டமைக்காகப் பெருமளவிலான அரச நிதியைச் செலவிட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பிலேயே இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சமன் ஏக்கநாயக்க மீதான குற்றச்சாட்டு
ஜனாதிபதியின் செயலாளராகப் பதவி வகித்த சமன் ஏக்கநாயக்க, குறித்த தனிப்பட்ட பயணத்திற்கான நிதியை விடுவித்தபோது உரிய வெளிப்படைத் தன்மையுடன் செயற்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியிருப்பதைக் கருத்திற்கொண்டு, சந்தேகநபரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் பிரதிவாதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ ஆகியோர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |