இறுதி ரந்தோலி பெரஹராவை கண்டு களித்தார் அதிபர் ரணில்
கண்டி வரலாற்று சிறப்புமிக்க சிறி தலதா மாளிகையின் எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவைக் காண அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்துகொண்டார்.
பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச, சுசில் பிரேமஜயந்த், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் (Chris Van Hollen), இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ஆகியோரும் அதிபருடன் இணைந்து பெரஹராவைக் கண்டுகளித்தனர்.
தலதா மாளிகையின் முன்பாக

நேற்று (30) இரவு 7.03 சுப நேரத்தில் சிறி தலதா மாளிகையின் முன்பாக வடக்கு திசையை நோக்கிப் பயணித்த எசல பெரஹரா, தலதா வீதி, யட்டிநுவர வீதி, கந்த வீதி, டி.எஸ். சேனாநாயக்க வீதி ஊடாக பயணித்து ரஜ வீதியூடாகச் சென்றது.
வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவைக் காண, பாதையின் இருபுறமும் பெருமளவில் மக்கள் திரண்டிருந்தனர்.


