முட்டாள்தனமான கருத்து - பொங்கியெழுந்தார் ஹக்கீம்
அரசாங்கம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்றி மையப்பெட்டிகளை மட்டும் புதைப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட் வௌியிட்ட கருத்தை அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நிராகரித்துள்ளார்.
"இந்த அரசாங்கம் முஸ்லிம்களின் உள்ளத்தை அதிகளவு நோகடித்துள்ளது. இறுதியில் சர்வதேச தலையீட்டில் அந்த உரிமை கிடைத்தது. நசீர் அஹமட் போன்றவர்கள் அவர்களது முயற்சியில் இதனை செய்ததாக கூறினால் அது முட்டாள்தனம். எமது உறுப்பினர்கள் வௌியிடும் இவ்வாறான கீழ்த்தர கருத்தை நிராகரிக்கிறேன்" என ஹக்கீம் குறிப்பிட்டார்.
இதேவேளை 182 மையப்பெட்டிகள் மட்டுமே புதைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் நசீர் சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்திருந்தார்.
மட்டக்களப்பு - கோறளைப்பற்று - மேற்கு ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே அவர் மேற்கண்ட சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.