மீண்டும் ஒரு அரசியல் மாற்றத்தை நோக்கி நகர்கிறதா சிறிலங்கா - பசிலுடன் இரகசிய பேச்சில் றோ!
இந்தியாவின் றோவின் தலைவர் சமந் குமார் கோல், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கையாளரும், மூலோபாயவாதியுமான பசில் ராஜபக்சவுடன் தனியாக சந்திப்பொன்றை நடத்தியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா திரும்பிய நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இருப்பினும் பசிலுடன் இந்தியாவின் முக்கிய பிரமுகர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்கள் எவையும் முழுமையாக வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியாகாத உண்மைகள்

இதேவேளை கடந்த திங்கட்கிழமை கொழும்பில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் அதிபரின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் இந்தியாவிற்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர் மிலிந்த மொராகொடவும் கலந்துகொண்டனர்.
அதிபருடனான பேச்சுவார்த்தைகளின் போது றோ தலைவர் பல பாதுகாப்பு விடயங்கள் குறித்து பேசினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் குறித்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்தும் துறைமுகங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் குறித்தும் பேசியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிற்கு ரணில் உறுதி

இவ்வாறான பேச்சுவார்த்தையின் போது எனது அரசாங்கம் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் எதனையும் செய்யாது என அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விபரங்களை றோவின் தலைவர் இந்திய பிரதமரிடமும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடமும் தெரிவிப்பார் என்றும் அறியமுடிகின்றது.