எரிபொருள் விலை அதிகரிப்புக்கு இதுவே காரணம்! மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு
தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததால் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை மக்களிடம் இருந்து மீட்டெடுப்பதற்காகவே இலங்கையில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைப் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாகக் குறிப்பிட்டார். ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற போது 5 சதவீதமாக இருந்த இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம், தற்போது 3 சதவீதமாகக் குறைந்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற ஆதாரங்கள் தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலையான பொருளாதாரம்
ஒரு நாடாக இந்த நிலைமை மிகவும் மோசமானது என்றும், நாட்டின் கையிருப்புகளை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டைப் பொறுப்பேற்ற போது இருந்த கையிருப்புகளை இதுவரையில் அதிகரிக்க முடியவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், இந்த நாட்டில் நிலையான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் எவ்வித சாதகமான நடவடிக்கைகளையும் எடுப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்களுக்கு அதிக வரி விதிப்பது, எரிபொருள் விலையை உயர்த்துவது மற்றும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது மட்டுமே பொருளாதாரத்திற்கான ஒரே தீர்வு என இந்த அரசாங்கம் காட்டி வருவதாக சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |