கடலில் மிதந்து வந்த பொதிகளை மீட்ட காவல்துறை அதிகாரிக்கு இடமாற்றம் : வெளியான காரணம்
தெற்கு கடற்பரப்பில் கடலில் மிதந்து கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றில் பாரியளவிலான போதைப்பொருள் தொகையை பறிமுதல் செய்ய, தகவல் வழங்கிய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் ஹேமால் பிரசாந்த இடமாற்றம் செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
ஹேமால் பிரசாந்தவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை நிமித்தமாகவே அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக காவல்துறை தலைமையக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் தெரிவிப்பவர்களுக்கு வழங்க வேண்டிய 5 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியமை, நிர்வாக பலவீனங்கள் மற்றும் மூன்று மாதங்களுக்குள் போதைப்பொருள் சோதனைகளை முறையாக நடத்தத் தவறியமை உள்ளிட்டவை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை
குறித்த அதிகாரி 5 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியமை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை தொடங்கியுள்ளது.
அதன்படி, அவரை இடமாற்றம் செய்ய செப்டம்பர் 25 ஆம் திகதி காவல்துறை ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று (15) அதனுடன் தொடர்புடைய உத்தரவு கிடைத்த நிலையில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக காவல்துறை தலைமையக வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எனினும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஹேமால் பிரசாந்தவின் இடமாற்றம் தொடர்பாக இதற்கு முன்னர் வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
