புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை மீள பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தல்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை மீள பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அதி உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானியை நேற்றிரவு அதிபர் ரணில் விக்ரமசிங்க மீளப்பெற்றதை போல, புனர்வாழ்வு பணியக சட்ட மூலத்தையும் மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென எம். ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.
வர்த்தமானி மீளெடுப்பு

அதி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதிபர் ரணில் விக்ரமசிங்க குறித்த வர்த்தமானியை மீளப்பெற நடவடிக்கை எடுத்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என கருதப்படும் அடிப்படை கோட்பாட்டை புனர்வாழ்வு பணியக சட்டமூலம் மீறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை புனர்வாழ்வு பணியக சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்திருந்தார்.
அரசியல் சாசனத்தை மீறும் சட்டமூலம்

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் இலங்கையின் அரசியல் சாசனத்தை மீறுவதாக எஸ்.எம்.மரிக்கார் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களின் போது அவர்களை அடக்கவும், நீண்டகாலம் புனர்வாழ்வு மையங்களில் தடுத்து வைக்கவும் குறித்த சட்டமூலம் வழிவகுக்கும் என குடிசார் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.