ஆசிரியர் சேவைக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஆசிரியர் சேவைக்கான திறந்த மற்றும் வரையறுக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளில் நிலவும் சிக்கல்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
கல்வி, மனிதவலு மற்றும் மனித மூலதனம் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் சஜித் பிரேமதாச கருத்துக்களை முன்வைத்த போதே இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு கருத்து தெரிவித்த அவர், ”ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பு செயல்முறையில் திறந்த ஆட்சேர்ப்பிற்கான பட்ட தகுதி செல்லுபடியாகும் திகதி 2025.06.30 ஆம் திகதி என குறிப்பிடப்பட்டிருந்தது. இச்சமயத்தில் திறந்த சேவையில் இணைய விரும்பியவர்கள் தமது கோரிக்கைகளை என்னிடம் தெரிவித்தனர்.
செல்லுபடியாகும் திகதியில் திருத்தம்
இது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். அதனைத் தொடர்ந்து, அந்த செல்லுபடியாகும் திகதி 2026 மார்ச் 05 ஆம் திகதி என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் நல்லதொரு விடயம்.

மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் ஆசிரியர் சேவையில் ஆட்சேர்ப்பதற்கான செல்லுபடியாகும் திகதி 2023.02.10 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், இது தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்தி, இந்த திகதியையும் நீட்டிக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.
தற்சமயத்தில் நமது நாட்டில் அரச சேவையில் உயர் தகுதி பெற்ற பலர் கீழுழைப்புச் சேவையில் பணிபுரிந்து வருகின்றனர். கீழுழைப்புச் சேவை பட்டதாரிகள் அரச சேவையின் கீழ்மட்ட தரங்களில் சேவையாற்றி வருகின்றனர்.
ஆசிரியர் சேவையில் இணைய வாய்ப்பு
இன்றும் கூட, இளமானி மற்றும் முதுமானி பட்டங்களைப் பெற்று, அரச சேவையில் அலுவலக உதவியாளர்களாக, தொழிலாளர்களாக, ஆய்வக உதவியாளர்களாக பணிபுரிவோர் ஏராளமாக காணப்படுகின்றனர்.
கீழுழைப்புச் சேவை பட்டதாரிகளுக்கு நாட்டின் இலவசக் கல்வி முறையில் கற்பித்தல் சேவைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

குறைந்தபட்ச கல்வித் தகுதிகளுடன் அரச சேவையில் இணைந்து தொடர்ந்து கல்வி கற்று முதுமாணி பட்டம் வரை தமது கல்வியை முன்னேற்றிக் கொண்டிருக்கும், இவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி இவர்களுக்கும் ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பை கொடுக்க வேண்டும்.
அதேபோல், தொல்லியல் பட்டம் பெற்ற பட்டதாரிகள் பெரும் எண்ணிக்கையிலானோர் காணப்படுகின்றனர். வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம், இவர்களால் வரலாறு கற்பிக்க முடியாத நிலை காணப்படுகின்றன. இவர்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும்” என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |