அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு : நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை வழக்கில் 12 பேருக்கு மரணதண்டனை விதித்து அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதிவாதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இன்று (23) ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ஒருவருடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் மனைவி இங்கு கருத்து தெரிவிக்கையில், ”உயர்நீதிமன்றத்திடம் இருந்து நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்கின்றோம். நாங்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்து, எமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து எழுத்துமூலமாக கடிதமொன்றை கையளிப்பதற்காக வந்தோம்.
நீதி வழங்குமாறு கோரிக்கை
அத்துடன் எமது வழக்கு தொடர்பில் மேன்முறையீடு ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளோம். ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழாமிடம் இருந்து உண்மையில் ஒரு நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்.
ஜனாதிபதியிடமும் எமக்கு நீதியை வழங்குமாறு கேட்டுக்கொண்டோம். தற்போது நாம் மிகவும் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளோம். பிள்ளைகளுடன் பல தாய்மார்கள் இருக்கிறார்கள். மூவரடங்கிய மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம்.

எனினும், ஒரு நீதிபதி இவர்களை குற்றமற்றவர்கள் என விடுவித்தார். அதுதான் எமக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. இவர்களுக்காக இன்னும் ஒரு சந்தர்ப்பம் இருப்பதாக கருதுகிறோம்.
அந்த சந்தர்ப்பத்தையே நாம் பயன்படுத்துகிறோம். மேன்முறையீடு செய்து இந்த 12 பேரையும் விடுவிப்பதே எமது ஒரே எதிர்பார்ப்பாகும்“ என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |