குறைக்கப்பட்ட பி சி ஆர் பரிசோதனை - உண்மைத்தகவல்களை அறிவதில் பெரும் சிக்கல்
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள சுற்றறிக்கையின் படி நாளாந்த பி சி ஆர் பரிசோதனை மற்றும் ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதன் மூலம் நாட்டில் உண்மையான கொரோனா தொற்று தகவல்களை அறிந்து கொள்ள முடியாது என அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
அனைத்தும் மாவட்டங்களுக்கும் பி சி ஆர் பரிசோதனை, ரெபிட் என்டிஜன் குறைக்கப்பட்டுள்ளதால் உண்மை தகவல்களை அறிந்து கொள்ள முடியாது போவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல் படி நாட்டில் பிசிஆர் ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் குறைக்கபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 9976 பிசிஆர் பரிசோதனைகளும் 3324 ரெபிட் என்டிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
ஆனால் ஓகஸ்ட் 19 ஆம் திகதி 22290 பிசிஆர் பரிசோதனைகளும் 6347 ரெபிட் என்டிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.