நினைவேந்தல் ஒரு இனத்தின் பண்பாட்டுரிமை
இறந்தவர்களை வழிபடுவதும் நினைகூர்வதும் தமிழர்களின் பண்பாடு. அந்தப் பண்பாட்டிற்கு இராண்டாயிரம் ஆண்டுகள் கடந்த வரலாறு இருக்கிறது.
அத்துடன் போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் வைத்து வழிபடுகின்ற மரபும் பண்டைய தமிழ் மக்களின் பண்படாகும்.
அத்துடன் உலகில் போரில் இறந்த மக்களை நினைவுகூருகின்ற உரிமை உலகின் அனைத்து மக்கள் சமூகத்திற்கும் பொதுவானதாகும்.
யார் யாருடன் போரிட்டாலும் அதில் இறந்தவர்களை நினைவுகூர்கின்ற விடயத்தில் பாரபட்சமின்றி நினைவேந்தல் உரிமையை வழங்க வேண்டும் என்பது பன்னாட்டு சூழலில் வலியுறுத்தப்படுகின்றது.
இந்த நிலையில் இலங்கைப் போரிலும் இறந்தவர்களை நினைவுகூர்வதன் உரிமையை பன்னாட்டு சமூகம் பாரபட்சம் இன்றி வழங்க வேண்டும் எனக் கூறுகிறது.
இன ஒடுக்குமுறையின் கோரம்
ஈழத் தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாத்தின் ஒடுக்குமுறையால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள். இன உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், மொழி உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், தொழில் மற்றும் கல்வி உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், ஈழத் தமிழ் மக்களின் தாயகம் அபகரிக்கப்பட்ட நிலையில் அந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுகின்ற நிலமைக்கு தள்ளப்பட்டார்கள்.
அகிம்சை வழியிலான போராட்டங்களை முன்னெடுத்து அதிலும் இனப்படுகொலைகளே பதிலாகவும் பரிசாகவும் வழங்கப்பட்ட நிலையில் தான் ஈழத் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தத் தீர்மானித்தார்கள். இதன் காரணமாகத்தான், வன்முறை எம்மீது திணிக்கப்பட்டது என்றும் நாம் விரும்பி ஆயுதங்களை ஏந்தியவர்களில்லை என்றும் தலைவர் பிரபாகரன் அவர்கள் அழுத்தம் திருத்தமாகக் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் ஈழ மண்ணில் உன்னதமான ஒப்பற்ற விடுதலைப் போராட்டம் ஒன்று மக்களால் முன்னெடுக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்பவர்கள், சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக ஈழ மக்களில் இருந்து பிறந்த போராளிகள்.
இன ஒடுக்குமுறையின் கோரம்தான் எங்கள் மண்ணில் ஆயுதம் ஏந்திப் போராடுகின்ற நிலையை ஏற்படுத்தியது. என்றபோதும்கூட, இன ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்தை ஒடுக்கவும் மக்களை பெருமளவில் இனப்படுகொலை செய்து, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை சிங்களப் பேரினவாதம் நிகழ்த்தியது. இதனால் ஒன்றரை லட்சம் மக்களை இழந்தோம்.
இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற வேளை துவங்கிய இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் கடந்தும் தொடர்கிறது.
யாரோ ஒருவருடைய பிள்ளை
சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராகப் போராடிய ஒவ்வொரு மாவீரரும் யாரோ ஒருவருடைய பிள்ளை என்பதை முதலில் இலங்கை அரசும் அதன் பேரினவாதிகளும் தெரிந்துகொள்ள வேண்டும்.
அத்துடன் அவர்கள் இந்த மண்ணின் பிள்ளைகள். அவர்கள் எங்கள் மக்களின் பிள்ளைகள். விடுதலைப் புலிகள் இயக்கமும் ஈழ மக்களும் வேறுவேறானவர்களல்ல. ஒவ்வொரு வீட்டிலும் கனவுகளுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் பிறந்த பிள்ளைகள், எல்லாம் துறந்து தேச விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்தார்கள்.
ஒவ்வொரு தாயும் ஒவ்வொரு தந்தையும் பெற்றெடுத்து, சீராட்டி வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகள் எங்கள் மாவீரர்கள். போராட்டத்திற்கு அனுப்பிவிட்டு விடுமுறையில் வரும்போது அந்தப் பிள்ளைகளை ஆரத்தழுவி பிடித்த உணவுகளை செய்துகொடுத்து, மீண்டும் களம் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் எங்கள் மாவீரர்கள்.
அவர்களை நினைவுகூர்வதனை தடுக்க எவருக்கும் உரிமையில்லை. சிங்கள தேசத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதப் போராட்ட வீரர்களை கார்த்திகை வீரர்கள் என நினைவுகூர இடமளிக்கப்படுகிறது.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரத்தான் இலங்கை அரசு தடுக்கிறது. அவர்களும் அரசுக்கு எதிராகவே ஆயுதம் ஏந்தியவர்கள். சிங்கள மக்களுக்கு ஒருநீதி, தமிழ் மக்களுக்கு இன்னொரு நீதி (அநீதி) என்ற பாரபட்ச அணுகுமுறைதான் இந்த விடயத்திலும் நடக்கிறது.
இதனால் காவல்துறை தடைகளை பிரயோகிக்க பல முயற்சிகள் நடந்தன. அதன் ஊடாக மாவீரர் நாள் நினைவேந்தலை தடுக்கவும் முயற்சிகள் இடம்பெற்றன. எந்த தடைகளையும் தாண்டி மாவீரர்களை நினைவுகூர்வது என்பதில் ஈழத் தாயகம் உறுதியோடுதான் இருக்கிறது.
ஆற்றுப்படுத்தும் வழிமுறை
நினைவுகூர்தல் என்பது ஒரு ஆற்றுப்படுத்தல் வழிமுறையாகும். காயங்களில் இருந்தும் இழப்புக்களில் இருந்தும் மீள்வதற்கான வழிமுறையாகும். உலகம் முழுவதிலும் நினைவேந்தல்களின் வழியாக மீள் வாழ்வும் மீட்சியும் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த அடிப்படையில்தான் நினைவேந்தல்களுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்பதை ஈழத் தமிழ் சமூகம் கடந்த பதினான்கு ஆண்டுகளுக்கு மேலாகவும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் அனைவருக்கும் நினைவேந்தல் உரிமை உண்டு என்று இலங்கை அரசு அறிவித்தாலும்கூட பன்னாட்டு சமூகத்திற்கு வாக்களித்தாலும்கூட நடைமுறையில் நினைவேந்தல்கள்மீது நேரடியானதும் மறைமுகமானதுமான ஒடுக்குமுறைகளும் அடக்குமுறைகளும் இருக்கவே செய்கின்றன.
மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுக்கள்மீது காவல்துறை விசாரணைகள், நினைவுத் தூபியொன்றை சேதப்படுத்தியமை, மாவீரர் நாள் அலங்கரிப்புக்களுக்கு சேதம் விளைவித்தமை, நீதிமன்றத்தில் காவல்துறை தடையுத்தரவு கோரியமை என்று இம்முறை அரசு நேரடியாக நினைவேந்தல்மீது தடைகளை ஏற்படுத்தியுள்ளது.
எங்கள் மக்கள் துயிலும் இல்லங்களில் கூடி கண்ணீர் விடவும் தமது கண்ணீரால் விளக்குகள் ஏற்றவும்தான் கோருகிறார்கள். தங்கள் பிள்ளைகளை அழைத்து அழவும் அவர்களின் பெயர்களை உச்சரித்து தங்கள் மனத்துயர்களையும் பிரிவின் ஆற்றாமைகளையும் வெளிப்படுத்தவே ஒன்று சேர்கிறார்கள்.
ஈழத் தாய்மார்களின் கண்ணீர் விளக்குகள்
தற்போது 2023ஆம் ஆண்டு மாவீரர் நாளை முன்னிட்டு பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அங்கு செல்கையில் மாவீரர்களைப் பெற்ற தாய்மார்களையும் தந்தையர்களையும் பார்க்கின்ற போது அவர்களின் முகங்களில் ஆயிரம் கதைகள் தெரிகின்றன. வீரமும் தெரிகிறது. ஈரமும் தெரிகிறது. தியாகமும் தெரிகிறது.
இந்த முகங்களைப் பார்த்தாலே, இந்த முகங்களைப் படித்தாலே இலங்கை அரசு திருந்த முடியும். உலக நாடுகள் உணர முடியும். தாம் பெற்றெடுத்த அருமைப் பிள்ளைகளை இந்த மண்ணுக்காக விதைத்துவிட்டு கண்ணீரோடும் துயரத்தோடும் இந்த மக்கள் துடிக்கின்றனர்.

உண்மையில் மாவீரர் நாளில் ஏற்றப்படும் விளக்குகள் நெய்யினால் மாத்திரம் எரிவதில்லை. மாவீரர்களைப் பெற்ற தாய்மார்களதும் தந்தைமார்களதும் உறவுகளதும் கண்ணீராலுமே எரிகின்றன.
இலங்கைத் தீவில் ஒரு தேசத்தில் தாய்மார்கள் இப்படி கண்ணீர் சிந்துகின்ற போது, அத் தாய்மார்களின் மனம் துயரில் தோய்ந்திருக்கும்போது சிங்கள தேசம் பொருளாதார நெருக்கடியாலும் அரசியல் சிக்கல்களாலும் பின்னடைவுகளுக்கு முகம் கொடுக்கவே நேரிடும்.
வடக்கு கிழக்கில் ஈழத் தமிழ் மக்கள் ஆள்வதற்கான போராட்டத்தை முன்னெடுத்தார்கள். ஆனால் அதனை சிங்களப் பேரினவாதம் தடுத்தது. இன்றோ, ஆழக்கூடாது என்று நினைத்தவர்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மாவீரர் துயிலும் இல்லங்களும் மாவீரர்களின் கல்லறைகள் ஒவ்வொன்றும் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை. அதனை சிங்கள தேசமும் உலகமும் புரிந்துகொள்ள முற்பட வேண்டும். அதில் இருந்துதான் இலங்கைத் தீவில் மாற்றங்கள் உருவாகக்கூடும்.
அத்துடன் மாவீரர்களை சுதந்திரமாக நினைவுகூர்கின்ற சூழல் உருவாக வேண்டும். ஈழத் தமிழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு, அவர்களின் தேசம் மலர்கின்ற காலத்தில்தான் அவ்வாறான சூழலும் சுதந்திரமும் கிடைக்கும் என்றால் வெகுகாலத்தில் அது நிகழவேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 27 November, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்