மூன்று மணிநேரத்திற்கு ஒரு தடவை பெறப்படும் அறிக்கை
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பரவலுக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் நிலை குறித்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு தடவை அறிக்கை பெறப்படுவதாக ஸ்ரீலங்கா கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன், கப்பலின் தன்மை குறித்து உரிய முறையில் ஆரயப்பட்டு வருவதாகவும் அதிகார சபையின் தலைவர் தர்ஷினி லஹந்தபுர தெரிவித்துள்ளார். இலங்கையில் நேற்று காலையில் இருந்து மூழ்கிவரும் எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் பாரிய எண்ணெய் கசிவு உட்பட பெரும் சுற்றுச்சுழல் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனினும் தற்போதைய நிலையில், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரபை தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து உதவிகளை பெறும் வகையில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை கப்பல் தொடர்பில் ஆராய்வதற்காக 9 பேர் கொண்ட ஸ்ரீலங்கா கடற்படை சுழியோடிகள் குழு குறித்த பகுதிக்கு பயணித்துள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.