உலக சுகாதார ஸ்தாபன அதிகாரியிடம் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த வேண்டுகோள்!
இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரி வைத்தியர் ஒலிவியா நிவேரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு - எதுல்கோட்டையில்அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் உலகம் முகம் கொடுக்கும் பாரிய சவாலான இந்த வைரஸ் பரவல் மற்றும் அதனால் சர்வதேச ரீதியாக எதிர் நோக்கும் சவால்கள் குறித்து இரு தரப்பினரும் நீண்ட நோரம் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், இந்தப் பேரழிவு ஏற்பட்டதால் இலங்கைக்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஒலிவியா நெவேரஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மிகவும் சவாலான காலம் முன்னால் இருப்பதாகக் கூறிய ஒலிவியா நெவெராஸ், உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையும் உயிர்களைக் காப்பாற்றவும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் இலங்கைக்கு எந்த வகையிலும் உதவ தயாராக உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

