தேர்தல் முறைமையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஆராய்வு
இலங்கையில் தொகுதி மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ கலப்பு முறையின் கீழ் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் போதே இதுத் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையின் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காணவும் தேவையான திருத்தங்களை பரிந்துரைக்கவும் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இது தொடர்பில் விவாதித்துள்ளது.
இதற்கமைய தொகுதிவாரியாக 60 வீத பிரதிநிதிகளையும், விகிதாசார முறையின் கீழ் 40 வீத பிரதிநிதிகளையும் தெரிவு செய்வது தொடர்பில் முன்னிலையான கட்சிகளுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் அனைத்து அரசியல் கட்சிகளினதும் வேட்புமனுக்களை கோரும் போது பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
உள்ளூராட்சி மன்றங்களில் தற்போதுள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
