75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு -ரணில் அதிரடி அறிவிப்பு
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்குள் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கப்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும், இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கலந்துகொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில், சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு, பயங்கரவாத ஒழிப்புச் சட்டம், ஊழலை ஒழிப்பதற்கான சட்டம் ஆகியன தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதனை ஜனவரி அல்லது பெப்ரவரியில் நீதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பார்.
தமிழ் கைதிகள் விடுதலை
அதேபோல் வடக்கு தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்டுள்ள பல தமிழ் கைதிகளை நாம் விடுதலை செய்துள்ளோம். பலரை நாம் விடுதலை செய்யவுள்ளோம். தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
காணாமல்போனோர் தொடர்பாக தற்போது 2000 கோப்புகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சியவற்றையும் விரைவாக நிறைவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளேன் எனவும் தெரிவித்தார்.
வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு
இதேவேளை, அடுத்த வாரம் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும், இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் கலந்துகொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார்.
இலங்கையின்
75ஆவது சுதந்திர தினம்
வருவதற்குள் தமிழ் மக்களின்
பிரச்சினைகளை தீர்க்க
எதிர்பார்க்கிறேன். இலங்கைக்குள்
தலையீடுகளை மேற்கொள்ளும்
தேவை எவருக்கும் இல்லை.
உள்நாட்டுப் பிரச்சினைகளை
நாமே தீர்த்துக்கொண்டு
முன்னோக்கி செல்லவே
எதிர்பார்க்கிறோம் எனவும்
தெரிவித்தார்.