சவப்பெட்டியுடன் வீதிக்கு வந்த மக்கள் - அரசாங்கத்திற்கு எதிராக புரட்சிப் போராட்டம்
பதுளை - அப்புத்தளையில் ஒப்பாரி வைத்து, சவப்பெட்டியை ஏந்தி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவும் மலையக மக்களின் இருப்பை உறுதி செய்யவும் அவர்களுடைய தொழில் பிணக்குகள் தொடர்பாகவும் பெருந்தோட்ட கம்பனிகளின் அடாவடி நிர்வாகத்திற்கு பதிலடி தரும் நோக்குடனும் உரத்தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் இன்றைய தினம் (23) பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் தலைமையில் இப்புரட்சிப் போராட்டம் நடைபெற்றது.
ஒப்பாரி வைத்தும், சவப்பெட்டியை ஏந்தியும் போராட்டகாரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், தமக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் அரசியல் பிரமுகர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ்,
அனைத்து வளங்களும் நிறைந்த எம் இலங்கைத் திருநாடு இன்று வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றது.
குழந்தைகள் குடிப்பதற்கு பால் மா இல்லை, அரிசித் தட்டுப்பாடு, உரத்தட்டுப்பாடு, பெருந்தோட்ட மக்கள் தேயிலை கொழுந்தை உண்ண வேண்டிய அவல நிலை, மேலும் 1000 ரூபாய் சம்பளம் என்ற கபட நாடகத்தில் சிக்கித் தவிக்கின்ற பெருந்தோட்ட மலையக மக்களை தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கின்ற பெருந் தோட்ட நிர்வாகங்கள் என அனைத்தும் தொடர்கதை - பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.
மலையக மக்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் இருப்பையும் தக்க வைத்துக்கொள்ள இன்று வீதிக்கு இறங்கி இருக்கின்றோம். இது முடிவல்ல ஆரம்பம் என்றார்.