மக்களின் செயற்பாட்டால் மீண்டும் ஏற்படவுள்ள பாரிய ஆபத்து- சவேந்திர சில்வா ஆதங்கம்!
கொவிட் தொற்றினால் தற்போது 10 முதல் 25 வரையான மரணங்களே நாளொன்றில் பதிவாகி வருவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னர், பொதுமக்கள் சிலரின் செயற்பாடுகள் காரணமாக கொவிட் வைரஸ் மீண்டும் பரவுவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாகவும் தெரித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தற்போது 500 முதல் 600 வரையான தொற்றாளர்களே நாளொன்றில் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார். இதேவேளை, கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீண்ட விடுமுறை காலப் பகுதிகளில் சிலர், சுற்றுலா பயணங்களை மேற்கொண்டு வருவதாகவும், அதனூடாக கொவிட் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாகவும் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்துக்கொள்ளும் பட்சத்தில், கொவிட் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.