பேராபத்தில் இலங்கை - பாதுகாப்புச் செயலாளர் எச்சரிக்கை தகவல்
இலங்கைக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வெளிநாட்டு சக்திகள் மற்றும் உள்நாட்டில் உள்ள மறைமுக ஆதரவுக் குழுக்களால் இலங்கைக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கை தேசிய பாதுகாப்பை நோக்கிய தனது இலக்குகளை அடைவதற்கு வலுவான பாதுகாப்புக் கொள்கை அவசியம் என அவர தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் “இலங்கையின் பாதுகாப்புக் கொள்கை கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம்” என்ற தொனிப்பொருளில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன உள்நாட்டு மதத் தீவிரவாதத்தின் மீது தாக்கம் செலுத்தும் நாடு கடந்த தீவிரவாதம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வெளிநாட்டு சக்திகள் மற்றும் உள்நாட்டில் உள்ள மறைமுக ஆதரவுக் குழுக்களால் இலங்கைக்கு அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பு
அரசாங்கத்திற்கு எதிரான அவர்களின் நடவடிக்கைகளின் பின்னணியில், சர்வதேச நாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புக்கள் கிடைப்பெறுவதாக கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கெதிராக நாட்டில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சம்பவங்கள் அச்சுறுத்தலாக அமைவதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன குறிப்பிட்டார்.