நள்ளிரவு இடம்பெற்ற சம்பவம் - பாதிக்கப்பட்ட மக்கள்
நுவரெலியா, இராகலை - மந்தாரம்நுவர பிரதான வீதியில் கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளமையால் அந்த வீதியூடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இவ்வாறு வீதியில் கற்பாறைகள் சரிந்திருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
வீதியில் கிடக்கும் கற்களை அகற்ற முற்பகல் 11 மணிவரை பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் எவரும் வரவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அன்றாட கடமைகளுக்காக நுவரெலியா நகருக்கு வருகைதருவோர் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
நிலைமையை கருத்தில் கொண்டு பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து கற்களை அகற்றும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த பகுதியில் மற்றுமொரு மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான அபாய நிலைமை தொடர்பில் ஆராய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரும் குறித்த பகுதிக்கு வரவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.




