விரைவில் இறுக்கமான நடைமுறை - முடிவுகளை அறிவித்தார் வடக்கு ஆளுநர்
தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரத்தை ஒவ்வொரு நாளும் A-9 வீதியில் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
நேற்று (5) வவுனியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை தொடர்பில் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் பதில் வழங்கிய அவர்,
வழித்தட அனுமதி சோதனை

குறித்த விபத்து தொடர்பில் காவல்துறை மற்றும் ஏனைய தரப்புகளிடம் விசாரணை அறிக்கையினை கேட்டுள்ளேன்.
இன்றைய தினம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவரோடு ஒரு உரையாடலை மேற்கொண்டு சில முடிவுகளை எடுத்திருக்கின்றோம்.
அதாவது யாழ்- கொழும்பு மற்றும் ஏனைய தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அனைத்தையும் வடக்கு மாகாணத்திற்குள் ஒரு இடத்தில் ஒவ்வொரு நாளும் வழித்தட அனுமதியினை பரிசோதிப்பது என்று.
A-9 வீதியில் ஏதோ ஒரு இடத்தில், பயணம் செய்யும் பேருந்துகளை 10 நிமிடங்கள் நிறுத்தி சாரதிகளை சோர்வு தன்மையில் இருந்து நீக்குவதற்கு ஒரு முயற்சியினை எடுத்துள்ளோம்.
ஒவ்வொரு மாத கடைசியிலும் தூர சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் தரப் பரிசோதனையினை உறுதிப்படுத்தும் பரிசோதனையினையும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.
பயணத்திற்கான நேரக் கட்டுப்பாடு

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான பயணத்திற்கான நேரக் கட்டுப்பாடு ஒன்றினையும் விதிப்பதற்கு உள்ளோம்.
எனவே அனைத்து விடயங்களும் இன்றைய தினம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடன் உரையாடி முடிவு எட்டப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் வடக்கில் பேருந்துகளால் ஏற்படும் விபத்துகளை குறைக்க முடியும்” - என்றார்.