உக்ரைனின் முக்கிய கட்டமைப்பை ரஷ்ய படைகள் தாக்கியதால் பதற்றம்
உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகில் உள்ள, பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளுக்கான சேமிப்புக் கிடங்கு மீது ரஷ்யப் படைகள் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த ட்ரோன் தாக்குதலால், அதிர்ஷ்டவசமாக கதிர்வீச்சு அளவில் எந்தவித உயர்வும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதிக அளவிலான அணுப் பொருட்கள் சேமிக்கப்பட்டுள்ள இடத்திற்கு மிக அருகில் இருக்கும் எரிபொருள் பெறும் கட்டிடம் இத்தாக்குதலால் பலத்த சேதமடைந்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் அத்துமீறல்கள்
தாக்குதல் நடந்த சமயத்தில் அந்தக் குறிப்பிட்ட கட்டிடத்திற்குள் அணு எரிபொருள் எதுவும் இல்லை என்றும், இதனால் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டு எவருக்கும் காயம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது என்றும் உக்ரைனின் எனர்ஜோஅடோம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் மிக மோசமான அணுப் பேரழிவு நிகழ்ந்த செர்னோபில் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீற்றர் தொலைவில் இந்தச் சம்பவம் நடந்துள்ள போதிலும், இது குறித்து ரஷ்யா இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இத்தாக்குதலுக்கு ரஷ்யா 'ஷாஹெட்' ரக தற்கொலைப்படை ட்ரோன்களைப் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் இத்தகைய துணிச்சலான அத்துமீறல்கள் நாளுக்கு நாள் எல்லை மீறிச் செல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |