ரஷ்ய உக்ரைன் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நாளை!
உக்ரைன் ரஷ்ய போர் தொடர்பில் நேற்றைய தினம் (28) இடம்பெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படாத நிலையில் நாளை(02) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று இந்த பேச்சுவார்த்தை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. சமரச பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் பிரதிநிதிகள், “ரஷ்யா உடனடியாக போரை நிறுத்த வேண்டும், தனது படைகள் உக்ரைனை விட்டு முழுமையாக வெளியேற ரஷ்யா உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தியது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், ஆறாவது நாளாக இன்று இடம்பெற்ற போரில் ரஷ்யா உக்ரைன் அரச கட்டடங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதன்படி உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது ரஷ்ய படைகள் குண்டுகளை அள்ளி வீசின.
இதில் இந்தியாவை சேர்ந்த ஒரு மருத்துவத்துறை மாணவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
கிவ் நகரிலுள்ள உளவுத்துறையின் கட்டடத்தின் அருகே வசிக்கும் மக்களை வெளியேறுமாறு ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது ஒட்டு மொத்த உலகின் எதிர்பார்ப்பாக உள்ளது. போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டுமென சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
