மாபெரும் அபிவிருத்தித் திட்டம் ஒன்றை அலரி மாளிகையிலிருந்தே ஆரம்பித்துவைக்க உள்ளார் மஹிந்த
இலங்கையில் அமைக்கப்படவுள்ள ஏழாவது அதிவேகப் பாதையான ருவன்புர அதிவேகப் பாதையின் முதற் கட்டமான கஹதுடுவயிலிருந்து இங்கிரிய வரையிலான பகுதியின் நிர்மாண வேலைகளை இன்று (07) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைப்பார்.
நாட்டில் தற்போதுள்ள கொவிட் நிலைமை காரணமாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அலரி மாளிகையிலிருந்து பிரதமர் இச்செயற்திட்டத்தை ஆரம்பித்துவைப்பார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்துக்கு அமைய நாட்டின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்களுக்கு பாதை வசதிகளை மிக வலுவாக நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடிய வகையில் அமைத்து அவற்றை மக்கள் வசம் ஒப்படைப்பதே அரசின் பொறுப்பு என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
மாகா பொறியியல் கம்பனியால் மேற்கொள்ளப்படவுள்ள இந்நடவடிக்கைக்காக 54.70 மில்லியன் செலவிடப்படவுள்ளது. அமைப்பதற்கான காலம் 30 மாதங்களாகும்.