அவசரகால சட்டத்துக்கு எதிராக களமிறங்கும் சஜித் - அநுர அணி
அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்கப்போவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake ) தெரிவித்துள்ளார்.
இதனை தோற்கடிக்க ஆளுங்கட்சியில் இருந்துகொண்டு புரட்சி செய்யும் 11 கட்சிகளும் முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அவசர காலச் சட்டத்தை பிரகடனப்படுத்தி அரச தலைவர் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் நடைமுறையில் இருக்கும் காலத்தின் பின்னர் அந்த சட்டத்தை நீடிப்பதற்கு ஒரு மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை கொண்டுவந்து அதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு கொண்டுவரும்போது தேசிய மக்கள் சக்தியும் இதற்கு எதிராக வாக்களிக்கும் என அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
