இலங்கையில் மிக மோசமான ஆட்சிமுறை - வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் முறையிட்டார் சஜித்
நாட்டு மக்களின் மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு மிக மோசமான அடக்குமுறை ஆட்சியொன்றை கையாள அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் முறையிட்டுள்ளார்.
கொரோனா தொற்றின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொழும்பிலுள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை கொழும்பில் வைத்து இன்றைய தினம் சந்தித்திருக்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபின், பிரான்ஸ் தூதுவர் ரீட்டா குலியானா மாநெல்லா, ஜேர்மான் தூதுவர் ஹோல்கர் சூபர்ட், ரோமேனியாத் தூதுவர் விக்டர் சூடியா உட்பட பல்வேறுமட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள் இந்த அழைப்பை ஏற்று எதிர்கட்சித் தலைவரது உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
சுமார் ஒருமணிநேரத்திற்கும் அதிகமாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் உலகளாவிய ரீதியில் பொருளாதார நிலைமை, அதற்கு சமமாக இலங்கை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகள் என பல்வேறு விடயங்களை எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்கு சவாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறிக்கும் அளவிற்கு அரச அடக்குமுறை கையாளப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட ஐரோப்பியாவின் முக்கிய நாடுகளின் தூதுவர்களுடனான சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் நிலைமையை கையாள்வதில் அரசாங்கம் பலவீனப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீலங்காவில் சகல மக்களுக்கும் தடுப்பூசியை ஏற்றும் செயற்பாட்டை முன்னெடுக்க சர்வதேச நாடுகளின் பூரணமான ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள சில திட்டங்கள் குறித்து தனது கருத்தை பதிவுசெய்திருக்கும் சஜித் பிரேமதாஸ, அதன் பலவீனமான நிலைமைகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதஉரிமை, சிவில், பொருளாதாரம், சமூகம், அரசியல், ஆன்மீகம், மத மற்றும் கலாசார உரிமைகளைப் பலப்படுத்துவது குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன, கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
