ஆட்சி செய்ய முடியாவிட்டால் தகுதியானவர்களிடம் நாட்டை ஒப்படையுங்கள்! சஜித் ஆவேசம்
ஆட்சி செய்ய முடியாவிட்டால் ஆட்சி செய்யக்கூடிய தகுதியுடையவர்களிடம் நாட்டை ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்விற்கு எதிர்ப்பை வெளியிட்டு இன்று நடாத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்காது எரிபொருள் விலையை குறைத்து நிவாரணங்களை உடன் வழங்க வேண்டும்.
நாட்டை அபிவிருத்தி செய்யவும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் அரசாங்கத்திற்கு முடியாவிட்டால் அதனை செய்யக்கூடியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும்.
மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு பதிலாக அரசாங்கம் மக்களை மேலும் மேலும் துன்புறுத்தி வருகிறது. கொவிட் பெருந்தொற்று, வேலையில்லாப் பிரச்சினை, உரப் பிரச்சினை, பிள்ளைகளின் கல்விப் பிரச்சினை என நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
மக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படவில்லை, அரசியல் செல்வாக்கு உடையவர்கள் மட்டுமே கொவிட் தடுப்பூசியை ஏற்றிக் கொள்கின்றனர் என்றார்.
இதேவேளை, எரிபொருள் விலையை உயர்த்திய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் யார் நாட்டுப் பற்றாளர்கள் யார் தேசத் துரோகிகள் என்பதனை இந்த நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது மக்கள் புரிந்து கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.











