நாட்டின் நிர்வாகத்தை நகைச்சுவையாக மாற்றியுள்ள அமைச்சர்கள் - எதிர்க்கட்சித் தலைவர் சீற்றம்
நாட்டின் நிர்வாகத்தை முழு நகைச்சுவையாக இந்த அமைச்சர்களே மாற்றியுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை - அம்பலாந்தோட்டை மலாய் கொலனியில் உள்ள உச்சவாலிகா விகாரையில் நடைபெற்ற உந்துவப் பெருவிழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
தற்போதைய அரசாங்கம் இன்று முழு நாட்டையும் இருளில் மூழ்கடித்துள்ளதாகவும், விரக்தியடைந்த நாடே மிச்சப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலையேற்றம் மற்றும் பணவீக்கம் அதிகரித்து நாட்டை பாதாளத்தை நோக்கித் தள்ளுவதால் இந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொருட்களின் விலைகளை குறைக்குமாறு அமைச்சரிடம் கேட்ட போது, பொருட்களின் விலைகளை குறைப்பது எப்படி என்பதை கற்றுக்கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர் மீள கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் நிர்வாகத்தை முழு நகைச்சுவையாக இந்த அமைச்சர்களே மாற்றியுள்ளனர்.
இந்த இருண்ட பயணத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியே என்றும் இருளின் நடுவே தோன்றிய ஒரே ஒரு வெள்ளிக் கோடு ஐக்கிய மக்கள் சக்திதான் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.