அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு
தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கேற்ப அரசாங்க ஊழியர்களின் நாளாந்த வாழ்க்கைச் செலவை பிரச்சனையின்றி முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றவேளை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுசன ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வதற்காக அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவோ அல்லது தனியார்துறை ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கவோ அரசாங்கத்திடம் ஏதேனும் திட்டம் உள்ளதா என ஊடகவியலாளரொருவர் வினவியுள்ளார்.
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமாயின் அது மக்களின் வரிப்பணத்திலிருந்தே செலுத்தப்படும். இது தொடர்பில் உயர் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு வருகிறது.
கடந்த காலத்தில் வரவு செலவு திட்டத்தில் வருமானத்தை விட செலவு அதிகமாக காணப்பட்டது. எனினும் இம்முறை அப்படியல்லாமல் செலவு அதிகரிக்காத வகையில் வரவு செலவு திட்டத்தை பிரதமரும், நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க தயாரிப்பார்.
அத்துடன் தற்போதைய வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பிற்கு ஏற்றாற்போல் நாளாந்த வாழ்வை பிரச்சினையின்றி வாழ்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
