உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ஜேவிபி : அம்பலப்படுத்திய நாமல்
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியவர்களின் பெற்றோர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் தீவிர உறுப்பினர்கள் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் தீவிரமாக அரசியலாக்கி வருவதாகவும் இந்த ஒட்டுமொத்தச் சம்பவத்தின் "கடைசி நூல்" மக்கள் விடுதலை முன்னணி வசமே உள்ளது என்பது தற்போது தெளிவாகியிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டார்.
பிள்ளையான் அரசியல் கைதி
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பிள்ளையானைப் பார்ப்பதற்கு நான் சிறைச்சாலையின் சுவரைத் தாண்டிக் குதிக்கவில்லை. சட்டப்பூர்வமாக, ஆவணங்களில் கையெழுத்திட்டுத்தான் பார்க்கச் சென்றேன். அந்த நேரத்தில் சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் அருகில் இருந்தார். அது ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டது.

நிலைமை இப்படி இருக்கையில், பொதுமக்களின் பணத்தைச் செலவழித்து பிரான்சுக்குச் சென்று, நாமல் பிள்ளையானைப் பார்க்கச் சென்றாரா என்று வாக்குமூலம் எழுதுவது பொதுப் பணத்தை துஷ்பிரயோகம் செய்யும் செயலாகும்.
நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் பிள்ளையான் அரசியல் கைதியாக வைக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர பிள்ளையான் செய்த அர்ப்பணிப்புக்காக முன்நின்று பேசுவதற்குத் நாம் இருமுறை யோசிக்கப் போவதில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் கோப்புகளை மூடிமறைத்த அதிகாரிக்கு பதவியுயர்வு வழங்கி, அதே அதிகாரியை அனுப்பி வாக்குமூலம் எழுதி வாங்குகின்றனர்.
மக்கள் விடுதலை முன்னணி
இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியவர்களின் பெற்றோர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தீவிர உறுப்பினர்கள், தாக்குதல் நடத்தியவரின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்த ஒரு நபர்.

தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தங்களிடம் இருப்பதாகக் கூறிய சாட்சிகளை அவர்கள் ஏன் இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.
மிரட்டி, வலுக்கட்டாயமாக வாக்குமூலங்களை எழுதி வாங்கி, மனித உயிர்கள் இழந்திருக்கும் நிலையிலும், அதன் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற முயற்சிக்கிறார்கள்.
இதிலிருந்தே இந்நாட்டின் சட்டம் யாருடைய தேவைக்காகவும், யாருடைய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகவும் செயல்படுகிறது என்பது தெளிவாகப் புரிகிறது“ எனத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |