ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
அரச ஓய்வூதியக் கொடுப்பனவு மறுசீரமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில். ஓய்வூதியக் கொடுப்பனவு மறுசீரமைப்பின் முதற்கட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகளில் 98 சதவீதமானவை ஏற்கனவே முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
புதிய ஓய்வூதியப் பயனாளிகள்
ஓய்வூதியத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தரவுக் கட்டமைப்பில் மொத்தம் 463,000 ஓய்வூதியதாரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 429,000 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளன.

அத்துடன், இலங்கையில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 2,500 புதிய ஓய்வூதியப் பயனாளிகள் இக்கட்டமைப்பில் புதிதாக இணைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓய்வூதியக் கொடுப்பனவுகளை விநியோகிக்கும் செயல்முறையை மேலும் விரைவுபடுத்துவதற்காக, பிரதேச செயலகங்கள் மட்டத்தில் தற்போது இணையவழி (Online system) கட்டமைப்பு ஒன்று வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது.
இத்தொழில்நுட்பத்தின் மூலம் இதுவரை சுமார் 397,154 ஓய்வூதியதாரர்களின் தரவுகள் கணினிமயப்படுத்தப்பட்டு, கொடுப்பனவு நடைமுறைகள் தானியக்கமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |