20 வருடங்களாக அதிகரிக்காத எம்.பிக்களின் சம்பளம் - அமைச்சர் வேதனை
கடந்த 20 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லையென இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை மறுத்த அவர், இவ்வாறான செய்திகளைப் பரப்புபவர்கள் சிறப்புரிமைக் குழுவின் முன் கொண்டு வரப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
வரியின்றி வாகன இறக்குமதி

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியால் விவசாயிகள் மற்றும் மக்கள் பாரிய இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நேரத்தில் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்ய எந்தவித கோரிக்கையையும் முன்வைக்க மாட்டார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்யும் சிறப்புரிமை சிறிமாவோ பிரதமராக இருந்த காலத்தில் காணப்பட்டது.தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் அவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை.
20 வருடங்களாக அதிகரிக்காத சம்பளம்

அத்துடன் கடந்த 20 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாத நிலையில் அவர்கள் கடும் சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை வரியில்லாமல் வாகனங்களை இறக்குமதி செய்யக் கோரி நிதியமைச்சுக்கு எந்தக் கோரிக்கைகளும் வரவில்லையென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.