உப்பு இறக்குமதி : அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
கடந்த அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தின் காரணமாக இலங்கை(sri lanka) உப்பு இறக்குமதியை செய்ய வேண்டியிருந்தது என்று தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி(sunil handunnetti)தெரிவித்துள்ளார்
. மோசமான வானிலை நிலவிய போதிலும், முன்னர் உற்பத்தி செய்யப்பட்ட உப்பை சேமித்து வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
எதிர்காலத்தில் உப்பு இறக்குமதி
அத்தகைய முன் தயாரிப்புகள் இல்லாததால், தொழிற்சாலைகளுக்குத் தேவையான உப்பை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதை புதிய அரசாங்கம் உறுதி செய்யும் என்று அவர் மேலும் கூறினார்.
தனியார் துறைக்கு உப்பு இறக்குமதி செய்ய அனுமதி
இதேவேளை தனியார் துறைக்கு உப்பு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் ஏற்படவிருந்த உப்பு தட்டுப்பாடு காரணமாக, தொழில்துறை தேவைகளுக்காக 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய கடந்த டிசம்பரில் அமைச்சரவை அனுமதி வழங்கியது.
அரச துறைக்கு ஜனவரி 31 ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பெப்ரவரி 28 ஆம் திகதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இன்று வரை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தால் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உப்பின் அளவு 11,890 மெட்ரிக் தொன்கள் ஆகும்.
இருப்பினும், உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளரின் தலைமையில் இன்று (03) கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன்படி, இதுவரை அரச துறைக்கு மட்டுமே உப்பு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், இன்று முதல் தனியார் துறைக்கும் உப்பு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |