எல் நினோவால் வடக்கிற்கு ஆபத்து..! எச்சரிக்கும் யாழ். பல்கலை பேராசிரியர் பிரதீபராஜா
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வலுவான எல்நினோ செயற்படத் தொடங்கியுள்ள நிலையில், இந்து சமுத்திர இருமுனை குறியீடு திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியரும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக அதிகரித்து +0.64 என்ற அளவை எட்டியிருந்த இந்து சமுத்திர இருமுனையின் அளவு பெறுமதி, இவ்வாரம் திடீரென +0.18 ஆகக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திடீர் மாற்றம் எதிர்பாராத நிகழ்வாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
குறைந்த மழைவீழ்ச்சி
இந்து சமுத்திர இருமுனையின் நேர்மறையான பெறுமதி வலுவாக காணப்படும்போது, அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கைக்கு போதுமான மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

எனினும், எல்நினோவின் தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனையின் அளவு பெறுமதி மேலும் வலுவிழந்தால், குறித்த காலப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சி குறைவடையக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக, தென்மேற்கு இலங்கையில் பருவமழை காலத்தில் குறைந்த மழைவீழ்ச்சி பதிவான பகுதிகளில் இது எதிர்காலத்தில் நீர் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், செப்டெம்பர் மாதத்தின் நடுப்பகுதி வரை இந்து சமுத்திர இருமுனையின் அளவு பெறுமதியின் போக்கை உன்னிப்பாக அவதானித்த பின்னரே, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கிடைக்கக்கூடிய மழைவீழ்ச்சி தொடர்பில் உறுதியான முடிவுக்கு வர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நீருக்கான தேவை
எல்நினோ தொடர்ந்து வலுவாகச் செயற்பட்டு, இந்து சமுத்திர இருமுனையின் அளவு பெறுமதி வலுவற்ற நேர்மறை அல்லது எதிர்மறை நிலையில் காணப்பட்டால், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மிகவும் குறைந்தளவிலான மழைவீழ்ச்சியே கிடைக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது இடைப்பருவ மழை மற்றும் வடகீழ் பருவமழையின் நிலைமை இந்து சமுத்திர இருமுனையின் அளவு செப்டெம்பர் நடுப்பகுதி பெறுமதியைப் பொறுத்தே அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நீர்வளம் மற்றும் வாழ்வாதாரத்துக்கு இந்த இரு பருவமழைகளும் மிகவும் முக்கியமானவை. அப்பகுதிகளின் பெரும்பாலான நீர்த்தேவைகள் இந்த மழைப்பொழிவுகளிலேயே தங்கியுள்ளன.
எனவே, எதிர்வரும் காலப்பகுதியில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தேவையற்ற நீர் விரயத்தைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவில் திருவிழாக்கள், அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலம் உள்ளிட்ட காரணங்களால் இக்காலப்பகுதியில் நீருக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதால், தற்போதுள்ள நீர்வளத்தைப் பாதுகாப்பது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |