ரவிராஜ் படுகொலையின் சந்தேக நபரான சம்பத் மனம்பேரி : மொட்டுவின் அதிரடி அறிவிப்பு
போதைப்பொருள் விவகாரத்தில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி நடராஜா ரவிராஜ் ( Nadarajah Raviraj) படுகொலை விவகாரத்தில் சந்தேக நபரல்ல, அவர் சாட்சியாளர் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவருக்கு எதிராக இந்த விடயத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்காணலின் போது, சம்பத் மனம்பேரி - நடராஜா ரவிராஜ் படுகொலையின் சந்தேக நபர் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) குறிப்பிட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பிரிவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டது.
ரவிராஜ் படுகொலை
இதற்குப் பதிலளித்த சாகர காரியவசம், “சம்பத் மனம்பேரி நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் சந்தேக நபரல்ல, அவர் சாட்சியாளர். அவருக்கு எதிராக இந்த விடயத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. இதனை நான் ஆராய்ந்து பார்த்தேன்.
ஊடகங்களில் இவ்விடயம் வெளியானதன் பின்னர் ஆராய்ந்து பார்த்தேன். கட்சியின் வேட்புமனு வழங்கும் போது சகல உறுப்பினர்களும் சத்திய கடதாசி வழங்கினார்கள். அதில் இவர் இந்த விடயம் பற்றி எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை.
எமது கட்சி சார்பில் பல்லாயிரக்கணக்கானோர் தேர்தலில் முன்னிலையானார்கள். இவற்றில் குற்றவாளிகளும், சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களும் இருக்க முடியும். அனைவரின் பின்னணியும் எமக்குத் தெரியாது.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
