காற்றாலை மின் சக்தி திட்ட விரிவுபடுத்தலை நிறுத்த தீர்மானம் !
மன்னார் மாவட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு மேலாக மாவட்ட ரீதியாக அனுமதி பெறாது ஆய்வு என்ற ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் சக்தி திட்டத்தின் விரிவுபடுத்தலை உடனடியாக நிறுத்தும் விதமாக மன்னார் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மன்னார் நகர் பிரதேச செயலாளர் திரு.ம.பிரதீப் அவர்களின் நெறிப்படுத்தலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் மன்னார் நகர மண்டபத்தில் இன்று மதியம் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் கரையோரப்பகுதிகளில் ஐந்து வருடங்களுக்கு மேலாக மணல் ஆய்வு என்ற போர்வையில் பேசாலை, நடுக்குடா,கட்டுக்காரன் குடியிருப்பு போன்ற பகுதிகளில் நிலத்தின் கீழ் 25 அடி ஆழத்திற்கு துளையிட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த ஆய்வு மற்றும் அகழ்வை உடனடியாக நிறுத்திவதற்கான தீர்மானம் மேற்கோள்ளப்பட்டுள்ளது.
அதே நேரம் மன்னாரில் கடந்த வருடம் அமைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டம் காரணமாக மீன் பிடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்திய நிலையில் மன்னார் மாவட்டத்தில் மேலதிகமாக நிறுவப்பட கலந்தாலோசிக்கப்பட்டும் காற்றாலை செயற்திட்டத்தையும் நிறுத்துவதற்கு அபிவிருத்தி குழுவால் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் பிரதேச ரீதியாக மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் பற்றியும் விரிவாக கவனம் செலுத்தப்பட்டதுடன் கடந்த வருடம் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டன என விரிவாக ஆராயப்பட்டது.
