அம்பன் கிழக்கில் மணல் அகழ்வு: பல்வேறு ஊழல் அம்பலம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு பகுதியில் 2023, 2024 காலப்பகுதியில் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் ஊடக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்ட மணல் விநியோகத்தில் பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தால் கணக்காய்வு நடவடிக்கைகளுக்கென நியமிக்கபட்ட 5 பேர் கொண்ட கணக்காய்வு குழு அறிக்கையினை அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கையளித்துள்ளது.
இதில் பல்வேறு ஊழல் குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 840 உழவு இயந்திர சுமைக்கென கனிய வளங்கல் மற்றும் புவி சரிதவியல் திணைக்களத்திடம் அனுமதி பத்திரம் பெற்றுக்கொண்டு 2320 உழவு இயந்திர சுமை மணல் மண் கொட்டோடை பகுதியில் அகழப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சுமார் 2 மில்லியன் அரச வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், மணல் அகழ்வு விநியோகம் போன்ற நடவடிக்கைகளின்போது எந்தவொரு நிதி நடவடிக்கையும் வங்கி ஊடகவும், பிரதேச செயலக முன் அனுமதி பெறப்பட்டு மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிதி நடவடிக்கை கிராம அபிவிருத்தி சங்கம் யாப்பு மற்றும் உப விதிகளுக்கு முரணானது என்றும், எந்தவொரு நிதி நடவடிக்கை களுக்கும் உரிய சட்ட ரீதியான ஆவணங்கள் இல்லை என்றும், எந்தவொரு கொடுப்பனவு மற்றும் செயற்பாடுகளுக்கும், பொதுச்சபை அல்லது நிர்வாக சபை கூட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளரின் அனுமதியுடன் தமக்கு வேண்டிய வீதிகள் அமைக்கபட்டமை, பிரதேச செயலகத்தை சேர்ந்த கண்காணிப்பு உத்தியோகத்தர்களுக்கா ன கொடுப்பனவுகளும் சபை அனுமதியின்றி வழங்கப் பட்டுள்ளதாக்கவும், இலங்கையில் பௌர்ணமி நாளில் எந்தவொரு கனியவளங்கள் அகழ்வு, மற்றும் விநியோகம், என்பன அரசால் தடுக்கப்பட்டிருந்தும் அதனையும் மீறி மணல் மண் அகழ்ந்து விநியோகிக்கப்பப்பட்டுக் கொண்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதில் மருதங்கேணி காவல்துறையினரால் ஆறு உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு முன்வைக்கப்பட்டிருந்தது.
அதற்கான குற்றப்பணமும், சங்க நிதியிலிருந்து செலுத்தப்பட்டுள்ளது என்றும், குறிப்பிடபட்டுள்ளது.
குறித்த மணல் மண் அகழ்வு விநியோகம் என்பன வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர், மற்றும் அவரது உத்தியோகாத்தர்களின் நேரடி கண்காணிப்பில் இடம்பெற்றுள்ளதுடன், அப்போதைய ஆளும் கட்சியின் நலனிற்காக அப்போதைய பிரதேச செயலாளர் செயற்பட்டதாகவும், பிரதேச மக்கள் தெரிவிப்பதுடன், குறித்த சங்கத்தின் உறுப்பினர்கள் சிலருக்கு கிராம அபிவிருத்தி சங்கம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த கிராம அபிவிருத்தி சங்கத்தை அப்போதைய பிரதேச செயலர் தவறாக வழிநடத்தியுள்ளதக்கவும், அதிலிருந்து தப்பித்து கொள்வதற்கு அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் அப்போதைய நிர்வாகிகளை நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு அதன் பொது சபை ஊடக நடவடிக்கை களை மேற்கொண்டு வருவதாகவும் குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன.
குறித்த அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தால் நியமிக்கபட்ட கணக்காய்வு குழுவின் அறிக்கை வருமாறு கணக்காய்வு குழுவின் அறிக்கை அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க நிதியறிக்கையிலுள்ள குறைபாடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடமையிலிருந்து அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் கணக்கு அறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.
அவை தொடர்பாக கடந்த இறுதிப் பொதுக்கூட்டத்தில் கணக்காய்விற்கென ஐவர் கொண்ட கணக்காய்வு குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.
அந்த நியமனத்தினூடாக எமக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தின் அடிப்படையில் எமது கணக்காய்வு குழு இரண்டு தடவைகள் கூடி கணக்காய்வினை மேற்கொண்டது.
அவற்றின் பிரகாரம் பின்வரும் தீர்மானங்களை எட்டியுள்ளது.
1. கணக்காய்வு அறிக்கையில் உள்ள கணக்கு விபரங்களுக்கும், கணக்கு பதியப்பட்ட ஆவணங்களுக்கும் எந்தவகையிலும் ஒத்துக்போகவில்லை. எந்தவித சட்டரீதியான பதிவு ஆவணங்களும் இல்லை
2. எந்தவொரு கொடுப்பனவுக்கும் பொதுச்சபை அல்லது நிர்வாக சபை கூடி தீர்மானிக்கப்படவில்லை.
3. எந்தவொரு கொடுப்பனவுகள், நடவடிக்கைகளும் கிராம அபிவிருத்தி சங்க உப விதி அல்லது யாப்பிற்கு உட்பட்டு மேற்கொள்ளப்படவில்லை.
4. எந்தவொரு கொடுப்பனவுகளும் பெறுவனவுகளும் வங்கியில் வைப்பிலிடப்பட்டு கூட்ட தீர்மானங்கள் இன்றியும், பிரதேச செயலக அனுமதி பெறப்படாமலும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
5. கனிய வளங்கள் மற்றும் புவிச்சரிதவியல் திணைக்களத்தின் தகவல் அறிக்கையின்படி அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு 840 உழவு இயந்திர சுமை மணல் மண் அகழ்ந்து விநியோகம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்திருந்த நிலையில் 2400 உழவு இயந்திர சுமை மணல்மண் அகழ்ந்து விநியோகிக்கப்பட்டிருக்கிறது.
மேலதிகமாக அகழப்பட்ட 1560 உழவு இயந்திர சுமை மணல் மண் அகழ்வும் பிரதேச செயலக கனிய வளங்கள் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அல்லது தவறான நோக்கத்தில் மேற்கொள்ளப்பபட்டிருக்க வேண்டும்.
6. போக்குவரத்துக்கென இரண்டு ஆண்டுகளில் தலைவர் மற்றும் பொருளாளரால் 487750/- நிதி சங்க நிதியிலிருந்து பெறப்பட்டிருக்கிறது. போக்குவரத்து கொடுப்பனவு தலமைக்கு ரூபா 750/- மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனால் 24365/- தலைவர் மற்றும் பொருளாளர் சங்கத்திற்கு மீள செலுத்தவேண்டும்.
7. அம்பன் கிழக்கில் நடந்த உறவினர்களுக்கு இடையிலான முரண்பாட்டை இரண்டு பிற குழுக்களுக்கு ஊடான முரண்பாடாக சித்தரித்து அதற்க்காக சங்க நிதியிலிருந்து செலவு செய்யப்பட்டிருக்கிறது. அந்நிதி முழுமையாக சங்கத்திற்கு செலுத்தவேண்டும். இதில் போலீஸ் நிலைய போக்குவரத்து நீதிமன்ற செலவு என்பன ரூபா 281600/- ம் சங்கத்திற்கு செலுத்தவேண்டும்.
8. இலங்கையில் பௌர்ணமி நாளில் எந்தவொரு கனியவளங்கள் அகழ்வு, மற்றும் விநியோகம், என்பன அரசால் தடுக்கப்பட்டிருந்தும் அதனையும் மீறி மணல் மண் அகழ்ந்து விநியோகிக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் மருதங்கேணி காவல்துறையினரால் குறித்த ஆறு உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு முன்வைக்கப்பட்டிருந்தது.
அந்த குற்றப்பணமும் சங்க நிதியிலிருந்து செலுத்தப்பட்டுள்ளது. குறித்த செயல் குற்றம் என்று தெரிந்தும் தலைவர் செயலாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனவே அப்பணமும் சங்கத்திற்கு செலுத்தவேண்டும்.
9. கொட்டோடை பிள்ளையார் ஆலயத்தின் அடியவர்கள் நேற்றிக்காக காவடி பாற்செம்பு எடுத்த வேளை அதற்காககவும் சிற்றுண்டி மென்பானம் என்பன கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதற்கும் நிர்வாக சபை தீர்மானம் இல்லை இதுவும் யாப்பை மீறிய செயலாகும்.
10. ஒருசிலரது வீட்டுக்கு செல்வதற்கான ஒழுங்கைக்கு களிமண்ணால் வீதி அமைக்கப்பட்டுள்ளது. இது கிராமத்தில் சம உரிமையை பாதித்துள்ளது. அதற்க்காக அவர்கள் களிமணல் இலவசமாக பெற்றே விதிகளை அமைத்துள்ளார்கள். ஆனால் அதற்குரிய கணக்கு பதிவுகளும் எங்கும் பதியப்படவில்லை. இது ஒரு பக்கச்சார்பு நடவடிக்கையாகும். அதற்கான செலவுகளுக்கு உரிய சட்டரீதியான ஆவணங்கள் சமர்பிக்கப்படாவிடின் அப்பணமும் சங்கத்திற்கு செலுத்தவேண்டும்.
11. எந்தவொரு செயற்பாடும் கூறுவிலை கோரல் அடிப்படையில் செயற்படுத்தப்படவில்லை. இதுவும் யாப்பை மீறிய நடவடிக்கை ஆகும்.
12. சங்க யாப்பின் பிரகாரம் ரூபாய் இரண்டாயிரம் மட்டுமே கையிருப்பில் வைத்திருக்க முடியும், என்ற பிரிவை முற்றுமுழுதாக மீறி சுமார் ஒருகோடிக்கு மேலதிகமான பணத்தினை பொருளாளர் கையாட்சியில் வைத்திருந்திருக்கின்றார். எந்தவித தீர்மானங்ளும் இன்றி செலவு செய்துள்ளார். இது திட்டமிட்ட முறைகேடாக கருதப்படவேண்டும்.
13. கடந்த சங்க நிர்வாகிகள் பயணங்களின் போது ரூபா 300/- மட்டுமே பயண செலவாக சங்க நிதியிலிருந்து பெற்றுக்கொண்டிருந்த போதும் குறித்த தலைவர் செயலாளர் ஆகியோர் தலா ரூபா 1500/- பயண செலவாக பெற்றுள்ளனர். இதற்கான கூட்ட தீர்மானங்கள் எதுவும் இல்லை.
14. ஒவ்வொரு மணல் அகழ்வு விநியோக நடவடிக்கைகளின் போதும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு, மற்றும் மேற்பார்வை கடமையிலிருந்துள்ளனர். அதனையும் மீறி குறித்த செலவுகள், கனியவளங்கள் மற்றும் புவி சரிதவியல் திணைக்களத்தின் அனுமதிக்கு மேலாக1560 உழவு இயந்திர சுமை மணல்மண் அகழ்ந்து விநியோகிக்கப்பட்டுள்ளது.
15. மணல் ஏற்றிய இடம் மட்டப்படுத்திய கூலி Jcp ரூபா 64000/- ஐ பொதுச்சபை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் மணல் பிட்டி பள்ளம் பரவியதாக பிறிதொரு கணக்கு காட்டப்பட்டுள்ளது. அதில் ரூபா 644500/- என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. ஏனவே இச்செலவும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனையும் சங்கத்திற்கு சம்மந்தப்பட்டவர்கள் செலுத்தவேண்டும்.
ஒட்டு மொத்தத்தில் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் 01.01.2023 தொடக்கம் 31/12/2024 வரையான கணக்கு அறிக்கையில் குறிப்பிட்ட எந்த கணக்கிற்கும் உரிய செலவுச் சான்றுகள், எதுவும் இல்லை.
இதனால் எதனையும் கணக்காய்வு குழு பரிசீலித்து தீர்மானங்களை மேற்கொள்ள முடியாதுள்ளது. கிராம அபிவிருத்தி சங்கத்தின் யாப்பிற்கும் கணக்கறிக்கைக்கும் எந்த தொடர்பும் காணப்படவில்லை.
குறிப்பாக மேற்கொள்ளப்பட்ட செலவீனங்களுக்கு நிர்வாகசபை தீர்மானங்களும் இல்லை, இதனால் குறித்த கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஒருசில விடயங்களை தவிர எதனையும் கணக்காய்வுக் குழு ஏற்றுக்கொள்ளவில்லை.
கிராம அபிவிருத்தி சங்கத்தை வழிநடத்துகின்ற விடயத்தில் கிராம அபிவிருத்தி திணைக்கள பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் தங்களது கடமையை சரியாக மேற்கொள்ளவில்லை என்றும், பிரதேச செயலரும் இது விடயத்தில் ஒருசார்பு நிலையிலிருந்து செயற்பட்டிருப்பதாக கருத முடிகின்றது.
ஏனெனில் மணல் அகழ்வு விநியோக நடவடிக்கையின் போது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்க்காக அவர்களுக்கு சங்க நிதியிலிருந்து கொடுப்பனவும் வழங்கப்பட்டிருக்கின்றது. இடைவேளை பிரதேச செயலகம் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொதுச்சபை தீர்மானங்கள் ஏதனையும் கருத்திற்கொள்ளாது செயற்பட்டிருப்பதும் புலனாகிறது மட்டுமல்லாமல் குறித்த மணல் விநியோக நடவடிக்கையால் கிராமத்தின் உள்ளக முரண்பாட்டையும் அது கருத்திற்கொள்ளவில்லை.
கணக்காய்வுக் குழுவின் தீர்மானத்தின்படி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அதிகாரிகள் இன்றிய வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் சுயாதினமான விசாரணை ஒன்றினை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதன் ஊடக இடம் பெற்ற கையாடல்களுக்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கணக்காய்வுக்குழு ஏகமனதாக தீர்மானிக்கின்றது.
குறித்த கணக்காய்வுக் குழுவின் அறிக்கை தீர்மானங்கள் கணக்காய்வுக் குழுவின் ஐந்து உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானமாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |