வெளிநாடு சென்ற சாரா ஜஸ்மின்! கட்டுநாயக்கவில் பரிசோதிக்கப்பட்ட CCTVவில் வெளிச்சத்துக்கு வந்த தகவல்
சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களில் சாரா ஜஸ்மின் என்பவரின் உடல் இருக்கவில்லை என்று மேல் மாகாண தெற்கு பிராந்திய பிரதி காவல்துறை மா அதிபர் சமந்த விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற விசாரணையின் போது நீதிமன்றத்தில் சாட்சியமளித்த அவர் மேற்கண்ட விடயத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சினமன் கிராண்ட் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி மொஹமட் இன்சாப் அகமட் வெளிநாட்டில் இருப்பதாகவும், தானும் அவருடன் கட்டுநாயக்க விமான நிலையம் சென்று அவர் வெளிநாடு சென்றதாகவும் சாரா ஜஸ்மின் கூறியிருந்ததால், அதனை உறுதிப்படுத்த விமான நிலைய CCTV காட்சிகள் பரிசோதிக்கப்பட்டது என்றும் விஜேசேகர நீதிமன்றில் முக்கிய விடயம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
9ஆவது பிரதிவாதி
இந்த வழக்கின் 9ஆவது பிரதிவாதியான சாஜித் ரம்சீன் குறித்து முன்வைத்த குறுக்கு விசாரணைக் கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இந்த தகவலை வெளியிட்டாக தெரிவிக்கப்படுகிறது.

2019ஆம் ஆண்டு கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக, மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நவ்பர் எனப்படும் நவ்பர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சிய விசாரணையின்போது இந்த தகவல்கள் வெளியாகின.
கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வில், நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க , சுஜீவ நிஷ்ஷங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் பின்வரும் விடங்களை அம்பலப்படுத்தியுள்ளன.
குறித்த காலப்பகுதியில் அம்பாறை பிராந்தியத்தின் மூத்த காவல்துறை அத்தியட்சகராக பணியாற்றிய தற்போதைய பிரதி காவல்துறைமா அதிபர் சமந்த விஜேசேகர, அரச புலனாய்வு சேவையின் கிழக்கு மாகாண அதிகாரியிடமிருந்து கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு சந்தேகத்திற்கிடமான இடங்கள் தொடர்பாக தகவல் கிடைத்தது.
மேலும் அந்த தகவலின் அடிப்படையில், அம்பாறை தலைமையக காவல்துறை பரிசோதகர் லசந்த தடல்லகே மற்றும் விசேட அதிரடிப்படையின் அதிகாரி அதுல ரத்நாயக்க ஆகியோருக்கு தகவல் தெரிவித்து, பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு அனுப்பப்பட்டது.
சாய்ந்தமருதில் இடம்பெற்ற சம்பவங்கள்
அதன்படி, 2019 ஏப்ரல் 26ஆம் திகதி சம்மாந்துறை பவுஸ் மாவத்தையில் உள்ள இஸ்மாயில் லெப்பை அப்துல் ரஹீம் என்பவரின் வீட்டில், ஈஸ்டர் தாக்குதலாளர்கள் பயன்படுத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) அமைப்பின் பெயர் பொறிக்கப்பட்ட கருப்பு நிறக் கொடி கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த இடத்தை சோதனை செய்த பின்னர், நிந்தவூரில் பழைய தியேட்டர் வீதியில் உள்ள மற்றொரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பல 'பேக்-பேக்' வகை பயணப் பைகள், தாக்குதலாளர்கள் பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பதிவு செய்யப்படாத 'படி' வகை வேன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்போது, கல்முனை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியிடமிருந்து சாய்ந்தமருது பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தானும் இராணுவத்தின் மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகேவும் சம்பவ இடத்துக்கு சென்றோம்.
யக்கட பாலம் அருகே சென்றபோது பல துப்பாக்கிச் சூடுகளும், மிகப் பெரிய வெடிப்புச் சத்தங்களும் கேட்டுள்ளது, அந்த துப்பாக்கிச் சூடு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்துள்ளது.
சாய்ந்தமருது கிராமத்தின் எல்லையில் உள்ள வீட்டை அடைந்தபோது, அங்கு வெடிப்பு ஏற்பட்டிருந்தது. பிரதான வாயிலுக்கு முன்பாக T-56 துப்பாக்கியுடன் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததார்.
அவர் 'நிஸாப்' என அடையாளம் காணப்பட்டார். மேலும், தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், வீட்டின் முன்பாக ஷஹ்ரானின் சகோதரரான 'செய்னி'யின் உடலும் காணப்பட்டது.
இதனுடன் சஹ்ரானின் தாய், மகன் மற்றும் சகோதரியின் உடல்களும் மீட்கப்பட்டன. சஹ்ரானின் தாயின் உடல் இருந்த இடத்தின் மேலுள்ள கான்கிரீட் தளத்தில் T-56 துப்பாக்கி, 27 டெட்டனேட்டர்கள் மற்றும் 56 ஜெலிக்னைட் குச்சிகள் மீட்கப்பட்டன.
வீட்டின் கூரையில் ஒரு காலை இழந்த நிலையில் கிடந்த உடல், ஷஹ்ரானின் மற்றொரு சகோதரரான ரில்வானுடையது என அடையாளம் காணப்பட்டது.
சாரா ஜஸ்மின் விசாரணை
அதேவேளை, சினமன் கிராண்ட் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி மொஹமட் இன்சாப் அகமட் வெளிநாட்டில் இருப்பதாகவும், தானும் அவருடன் கட்டுநாயக்க விமான நிலையம் சென்று அவர் வெளிநாடு சென்றதாகவும் சாரா ஜஸ்மின் கூறியிருந்ததால், அதனை உறுதிப்படுத்த விமான நிலைய CCTV காட்சிகள் பரிசோதிக்கப்பட்டது.

அந்த பரிசோதனையில், சாரா ஜஸ்மின் விசாரணையாளர்களை தவறாக வழிநடத்த முயன்றது தெரியவந்தது.
இருவரும் ஒன்றாக விமான நிலையத்துக்குச் சென்று பின்னர் தனித்தனி வாகனங்களில் வெளியேறியிருப்பது CCTV காட்சிகளில் பதிவாகியிருந்தது” என்றார்.
இதற்கிடையில், ஷாங்க்ரி-லா மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்சாப் ஆகியோரின் உடற்கூறு பரிசோதனையை மேற்கொண்ட நீதிமருத்துவ நிபுணர் வைத்தியர் எஸ்.டி. சன்ன பெரேராவும் சாட்சியமளித்தார்.
சினமன் கிராண்ட் தாக்குதலாளியின் உடலில் ஒரு கால் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும், மற்ற தாக்குதலாளியின் தலை உடலிலிருந்து முழுமையாக பிரிந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அவரது உடல் பல சிறிய துண்டுகளாக சிதறியிருந்ததுடன், இது தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் பொதுவாகக் காணப்படும் சேதம் என விளக்கினார்.
தாக்குதலாளியின் தாடை எலும்பு நடுப்பகுதியில் இரண்டாகப் பிளந்திருந்தது என்றும், இவ்வாறான அபூர்வமான எலும்பு முறிவு தற்கொலை குண்டு வெடிப்புகளில் மட்டுமே ஏற்படும் என்றும் நீதிமருத்துவ நிபுணர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |