“கழிவறையை சுத்தம் செய்யக்கூட தகுதியற்றவர்“ சரத் வீரசேகரவை வெளுத்து வாங்கிய பொன்சேகா
சரத் வீரசேகர ரியர் அட்மிரல் பதவிக்கு தகுதியுடையவர் அல்ல - கடற்படை கப்பலில் காணப்படும் கழிவறையை சுத்தம் செய்வதற்குக் கூட தகுதியில்லாதவரே அவர். ”கடற்படை குப்பைகளை சுத்தம் செய்யும் வீரசேகர ” என்ற புதிய பெயரை அவருக்குத் தரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
என்னை ஒருமையில் விளித்து கருத்து தெரிவித்தமையால், சரத் வீரசேகரவிற்கு மதிப்பளித்து உரையாற்றப்போவது இல்லை என அவர் தெரிவித்தார்.
துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் குறித்த விவாதத்தில் நேற்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சரத் வீரசேகர ஒரு மோசமான மனிதர், 2010ஆம் ஆண்டு சிவில் பாதுகாப்புப் படையினரை வைத்துக்கொண்டு அம்பாறையில் தேர்தலில் வெற்றிபெற்றார்.
அதன் பின்னர் 100 காணியை கைப்பற்றி சோளப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டார். அந்த வருமானத்தை அவர் தன்வசப்படுத்திக்கொண்டார். அதன் பின்னர் 2015ஆம் தேர்தலில் அவர் செய்த காரியங்களுக்காக படுதோல்வியடைந்தார்.
சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நான் பேசியதை தவறாக சித்தரித்தார். சுனில் ரத்நாயக்க ஒரு படுகொலையாளி. அவருக்கு சார்பாக சரத் வீரசேகர கருத்து வெளியிடுகின்றார்.
நீதிமன்ற தீர்ப்பை அவர் சவாலுக்கு உட்டுபடுத்துகின்றார். அவர் மாகாண சபைகளை இல்லாதொழிப்பதாக குறிப்பிட்டார், பாதாள உலகக் குழுவினருக்கு ஆயுதங்களை வழங்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்.
புர்கா தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.பொதுமக்களுக்கு இராணுவப் பயிற்சியை வழங்கப்போவதாக குறிப்பிட்டார். இவர் செய்யும் செயல்களால் உங்கள் அரசுக்கு நல்லதாக அமையப்போவது இல்லை என்றார்.