முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதி செத்துக் கிடக்கின்றது : சிவமோகன் ஆதங்கம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதி செத்துக் கிடக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு முள்ளியவளையில் குழாய்கிணறு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
உளவியல் ரீதியிலான தாக்குதல்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அவர்கள் உளவியல் பயங்கரவாத தாக்குதலுக்கு உட்பட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். சிங்கள அரசு தமிழ்மக்கள் மீதும் தொடர்ச்சியாக காலத்திற்கு காலம் உளவியல்ரீதியான தாக்குதலைத்தான் மேற்கொண்டு வருகின்றது.

தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் நாடாளுமன்றில் பெரும்பான்மையினை வைத்து நிறைவேற்றி விட்டு எமது மக்கள் மீது தங்கள் உளவியல் பயங்கரவாதத்தினை மேற்கொண்டு வந்திருந்தார்கள்.
அதேபோல் தான் வனவளத்திணைக்களம், படையினர், வனஜீவராசிகள் திணைக்களம் எம் மக்கள் மீது பயங்கரவாத நடவடிக்கையினை உளவியல் ரீதியாக மேற்கொண்டு வருகின்றார்கள். அதன் தொடராகவே இதுவும் அமைந்துள்ளது.
மக்களின் போராட்டங்கள் போராட்டங்களுக்கான நீதிகளை மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை நீதிமன்ற சரத்துக்கள் மூலம் இலங்கை அரசில் நிறைவேற்றப்பட்ட நீதி புத்தகங்கள் அடிப்படையில் நீதிபதி அவர்கள் தமிழ்மக்களுக்கான ஆதரவினை வழங்கியதை எதிர்த்து சிங்கள தேசத்தில் இனவாதிகள் நீதிபதிக்கு எதிராக கடும் உளவியல் தாக்குதல்களை மேற்கொண்டு அவராகவே நாட்டைவிட்டு வெளியேறி ஓடும்வரை அவரை வெளியேற்றி இருக்கின்றார்கள்.
இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இதன் விளைவினை ஜ.நா சபையில் இலங்கை தேசம் சந்திக்கும்.
கடந்த காலங்களில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நாங்கள் ஐ.நாசபை வரை கொண்டுசென்று சேர்த்துள்ளோம்.
முல்லைத்தீவு மாவட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஒவ்வொரு பிரச்சினைகள் காட்டமாக நிறைவேறி வருகின்றது. தமிழர் விடுதலைப் போராட்டம் முடக்கப்பட்ட போது அதில் இருந்து மக்கள் மீண்டு எழுவதற்கு இந்த முல்லைத்தீவு மாவட்டம்தான் உதவி செய்தது.

யாழ்.இடப்பெயர்வின் போது மக்கள் வந்து தஞ்சம் அடைந்தது, விடுதலை போராட்டங்களை வழிநடத்தியது இந்த முல்லைத்தீவு மாவட்டம்.
காணிவிடுவிப்பு போராட்டம் ஐ.நா வரை கொண்டு செல்வதற்கு இந்த மாவட்டத்தில் உள்ள மக்களின் போராட்ட வலிமைதான் காரணமாக இருந்தது.
இப்போது நீதிபதி விடயத்தினை எம்மக்கள் கையில் எடுப்பார்கள். அப்போது இந்த சிங்கள பேரினவாதம் விளித்துக்கொள்ளும்.” என்றார்.