ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை பிரயோகியுங்கள் - ஆளும்தரப்பு எம்.பியின் சர்ச்சை பேச்சு
சம்பள முரண்பாடு தொடர்பில் தற்போது பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மீது அரசாங்கம் அடக்குமுறையை கையாளவேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் உயர்கல்வி அமைச்சருமான எஸ்.பி. திஸாநாயக்க(S.P. Dissanayake) பகிரங்கமாக தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமுகமளித்து கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும். பணிபகிஷ்கரிப்பை அவர்கள் கைவிடத் தயாராகாவிட்டால் அடக்குமுறையை அவர்கள் மீது கட்டவிழ்த்து விடவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மலேசியா போன்ற தற்போது வளர்ந்துள்ள நாடுகளில் போராட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கவில்லை என்றும், அவ்வாறு இடமளித்திருந்தால் அந்நாடுகள் இன்னும் வறுமைநிலை நாடுகளாகவே இருந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.