கொழும்பில் பாடசாலை மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
கொழும்பு (Colombo) - ஹோமாகம பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளதாக நுகேகொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம, கிரிவத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “குறித்த மாணவி சுகயீனம் காரணமாக நீண்ட நாட்களாக பாடசாலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
பரீட்சைகளில் குறைந்த புள்ளி
பின்னர் மாணவி மீண்டும் பாடசாலைக்கு சென்றுள்ள நிலையில், விடுமுறை எடுத்த நாட்களுக்காக வைத்திய அறிக்கை ஒன்றை வழங்குமாறு பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆனால் இந்த மாணவி வைத்திய அறிக்கையை வழங்க தவறியுள்ளார். இதனால் இந்த மாணவிக்கு கடுமையாக தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த மாணவி பரீட்சைகளிலும் குறைந்த புள்ளிகளை பெற்றுள்ளதால், பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் விசாரணை
இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவி தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகேகொடை காவல்துறை பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
