பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் பெற ஸ்கொட்லாந்து பிரயத்தனம்
பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான சர்வஜென வாக்கெடுப்பை நடத்துவதற்கான மற்றுமொரு திகதியை ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜியன் (Nicola Sturgeon) முன்மொழிந்துள்ளார்.
அந்த வகையில் சர்வஜென வாக்கெடுப்பை நடத்துவதுவதற்கு முறையான சம்மதத்தை கோருமாறு பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சனை நிக்கோலா ஸ்டர்ஜியன் உத்தியோகபூர்வமாக கோரியுள்ளார்.
கேள்வி என்பது ஒன்றாகவே உள்ளதாக கூறியுள்ள நிக்கோலா ஸ்டர்ஜியன், ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக மிளிர வேண்டுமா என்பதே அந்தக் கேள்வி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக மிளிர வேண்டுமா
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஸ்கொட்லாந்து முதல் அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.
இதனை பிரித்தானிய அரசாங்கம் வழங்காத பட்சத்தில் தனது திட்டத்தை தொடர்ந்தும் செயற்படுத்துவேன் என நிக்கோலா ஸ்டர்ஜியன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எந்தவொரு வாக்கெடுப்பும் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவும் சந்தேகத்திற்கு இடமின்றி சட்டபூர்வமானதாகவும் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானிய அரசாங்கத்தின் அனுமதியின்றி சர்வஜென வாக்கெடுப்பை நடத்த முடியுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்திடம் ஸ்கொட்லாந்து அரசாங்கம் கருத்து கேட்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்புக்கு இது உகந்த நேரம் அல்ல
முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜியனின் முன்மொழிவை ஆய்வு செய்வதாக கூறியுள்ள போதிலும், மற்றுமொரு வாக்கெடுப்புக்கு இது உகந்த நேரம் அல்ல என்ற நிலைப்பாட்டில் தாம் தெளிவாக உள்ளதாகவும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்கான அதிகாரம் முழுமையாக பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் பிரித்தானிய அரசாங்கம் மேலும் கூறியுள்ளது.