சமரசம் கடந்த தார்மீகம் : ஈழத்தமிழர் விடுதலையும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வரைபும்
ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாறு என்பது வெறும் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கை மட்டுமல்ல அது ஒரு சுதேசிய இனத்தின் நிலத்தின் மீதான இருப்பையும், தனக்கான அடையாளத்தையும் தற்காத்துக் கொள்வதற்கான ஒரு நீண்ட நெடிய போராட்டம்.
ஈழப்போரின் வீழ்ச்சிக்குப் பின்னான இலங்கையின் அரசியல் ரீதியிலான சிதைவுகள், ஈழத்தமிழர் தரப்பை ஒரு தற்காப்பு நிலைக்கு தள்ளியுள்ளன. இந்தச்சூழலில்தான், தமிழகத்தில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் 2026ம் ஆண்டுக்கான தேர்தல் செயற்பாட்டு வரைபானது தமிழக அரசியலில் மட்டுமல்லாது உலகம் பரந்த ஈழத்தமிழர் அரசியலிலும் ஒரு புதிய தர்க்கத்தை முன்வைக்கிறது.
இது ஒரு தேர்தல் ஆவணம் என்பதற்கு அப்பால், ஈழத்தமிழர்கள் சர்வதேச அரங்கில் முன்வைக்க வேண்டிய ஈழவர்களுக்கான அரசியல் அபிலாஷைகளின் தொகுப்பாக உருவெடுத்துள்ளது எனக்கொள்வதே சாலப்பொருத்தம்.
முப்பதாண்டுகால ஆயுதப் போராட்டம்
முதலாவது தியாகத்தின் அளவுகோலும், சமரசத்தின் எல்லையும் ஈழத்தமிழர்களின் முப்பதாண்டுகால ஆயுதப் போராட்டம் அதற்காக ஈழ மண்ணில் ஒரு தலைமுறையே தன்னை தியாகித்து சிந்திய குருதி, இவையெல்லாம் வெறும் 'சமஷ்டி' என்ற ஒற்றை நிர்வாக மாற்றத்திற்காகச் அல்ல.

பல இலட்சக்கணக்கான உயிர்களை விலையாகக் கொடுத்துவிட்டு, மீண்டும் அதே நாட்டின் ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள் ஒரு தீர்வைத் தேடுவது என்பது அந்தத் தியாகங்களின் புனிதத்தைக் கேலிக்குள்ளாக்கும் ஒரு அரசியல் மனநிலையாகும்.
இந்த நிலையில்தான் சீமானின் வரைவு அறிக்கையின் ஒரு சில பக்கங்கள் ஈழத்தமிழர்களின் இந்த அடிப்படை நியாயத்தைப் பேசுகிறது. இலங்கை அரசுடன் தமது சில தேவைகளுக்காக இணங்கிப்போக முன்னிற்கும் இன்றைய ஈழத் தமிழ்க் கட்சிகளின் போக்கை காட்டிலும் இழந்த உயிர்களின் கனவான சுதந்திர தேசம் என்ற சுயநிர்ணய உரிமை நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பதே ஒரு தேசிய இனத்தின் மாண்பு என்பதை அது வலுவாகப் பதிவு செய்கிறது.
இலங்கைத் தீவில் சீனாவின் ஆதிக்கம்
இரண்டாவது புவிசார் அரசியல், இந்தியாவின் பாதுகாப்பரண் தமிழீழ தேசம் கடந்த கால மற்றும் சமகால ஆக்கிரமிப்புகளால் அல்லலுறும் ஈழத்தமிழர் விவகாரத்தை உலக நாடுகளின் மனிதாபிமானப் பிரச்சினையாக மட்டும் பார்க்கும் நிலையினை இந்த வரைவு மாற்றியமைக்கிறது.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை சர்வதேச வல்லரசுகளின் எந்தவொரு நிபந்தனைக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் அடிபணியாமல், ஈழத்தமிழர்களின் இறையாண்மையைப் பேரம் பேச மறுத்த ஒரு வரலாற்றுப் பின்னணியை இது ஆழமாகத் தொட்டு நிற்கிறது.

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு இஸ்ரேல் எப்படியோ, அப்படியே இந்தியாவிற்கு ஒரு தனித்தமிழ் ஈழம் புவியியல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த நட்பு நாடாக அமையும் என்ற வாதமும், அதேபோல தெற்காசியப் புவிசார் அரசியலில் மிக அதுவே முக்கியமானதுமாகும்.
சமகால நிலவரப்படி சீனாவின் ஆதிக்கம் இலங்கைத் தீவில் வலுவாக காலூன்றி வரும் நிலையில், ஒரு தனித் தமிழ்த் தேசத்தின் உருவாக்கம் இந்திய துணைக்கண்டத்தின் தென் எல்லைக்குப் பாதுகாப்பு ஒரு முக்கிய அரணாக அமையும் என்ற தர்க்க ரீதியான வாதத்தின் மூலம் அகண்ட பாரதத்தின் வெளியுறவுக் கொள்கையை நோக்கி எறியப்படும் அம்பு ஒரு காத்திரமான சவாலாகும்.
திட்டமிட்ட இனப்படுகொலை
மூன்றாவது இனப்படுகொலை அங்கீகாரமும் அதன் சட்டப்போராட்டமும் இலங்கையில் நடந்தது ஒரு திட்டமிட்ட 'இனப்படுகொலை' (Genocide) என்ற நிலைப்பாட்டில் இந்த அறிக்கை மிக உறுதியாக இருக்கிறது.
உண்மையில் போர்க்குற்றம் என்பதற்கும் இனப்படுகொலை என்பதற்கும் இடையில் ஒரு பாரிய அரசியல் இடைவெளி உண்டு.

இனப்படுகொலையை அங்கீகரிப்பது என்பது, அந்த இனம் ஒற்றையாட்சிக்குள் பாதுகாப்பாக வாழ முடியாது என்பதை உலகுக்கு உணர்த்தும் அதேவேளை பிரிந்து சென்று தன்னாட்சி அமைக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ் ஒரு பொது வாக்கெடுப்பு கோருவது, தற்போதைய இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நிலவும் அரசியல் பிளவுகளுக்கு அப்பால் ஈழத்தமிழ் மக்களின் உண்மையான விருப்பத்தை உலகிற்குச் சொல்லும் ஒரே ஒரு ஜனநாயக வழிமுறையாகும்.
ஈழத்தில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள்
நான்காவது இப்போது ஈழத்தமிழர் சமூகம் செய்ய வேண்டியது என்ன? ஈழத்தில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் இன்று யதார்த்த நெருக்கடிகளால் பலவீனப்பட்டு நிற்கின்றன.

ஆனால், தமிழகத்தில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் முன்வைக்கும் இந்த இலட்சியவாத அரசியல், ஈழத்தமிழர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தைத் தரக்கூடியது.
சீமானைத் தமிழகத்தின் ஒரு அரசியல் தலைவராக மட்டும் பார்க்காமல், அவர் முன்வைக்கும் இந்தத் தரவுகளையும், புவிசார் அரசியல் வாதங்களையும் ஈழத்தமிழர் தரப்பு தமக்கான சர்வதேச மேடைகளில் ஒரு பேர வலிமையாக (Bargaining Power) பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எனவேதான் இப்போது தமிழகத்தின் அரசியல் களத்தில் எழும் இத்தகைய ஒரு அதிகாரக் குரலும் அதன் பின்னால் ஒன்று திரண்ட மக்கள் திரட்சியையும் ஈழத்தமிழர்களின் சர்வதேச அரசியல் அபிலாசைகளுக்கும் தீர்வுப்பொறி நோக்கிய நகர்வுகளுக்கும் ஒரு வலுவான பின்பலமாக பயன்படுதிக்கொள்ள வேண்டும்.
சீமானின் தேர்தல் வரைவு
இறுதியாக அரசியல் என்பது சாத்தியமானதைச் செய்வது மட்டுமல்ல, தேவையானதைச் சாத்தியப்படுத்துவதும் தான். அதுபோல ஈழத்தமிழர்களுக்குத் தேவையானது ஒரு தற்காலிக அரசியல் தீர்வு அல்ல அது அவர்களின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் ஒரு சுதந்திரத்தேசம்.
இப்போது சீமானின் இந்த தேர்தல் வரைவு, ஈழத்தமிழர் பிரச்சினையை மீண்டும் அதன் அடிப்படைத் தார்மீகப் புள்ளிக்குக் அழைத்துவந்து நிறுத்த வேண்டிய சந்தர்ப்பமாக நாம் பயன்படுத்தியாகவேண்டும்.
அதேநேரம் தமிழர் தாயகத்தின் அரசியல் பிளவுகளைத் தாண்டி, உலகம் பரந்த தமிழினம் ஒரு புள்ளியில் இணைய வேண்டியதன் அவசியத்தை இந்த ஆவணம் நமக்கு ஒரு காலத்தின் சாட்சியமாக ஒரு புதிய எழிச்சிக்கான பாதையை தேட தூண்டியுள்ளது.
இது காலம் காலமாக நாம் பேசும் விடயம் என்று ஒதுக்கிவிடாமல் அதே போல இது ஒரு கட்சியின் பிரச்சாரமுமாக அல்லாமல், ஒரு இனத்தின் விடுதலைக்கான வழிகாட்டல் குறிப்புகளாக பார்க்கப்பட வேண்டும். ஈழத்தமிழினம் தனக்கான விடிவு நோக்கி இன்னும் வேகமாக பயணப்பட தயாராக வேண்டும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |