கெசல்கமுவ ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் - பின்னணியை வெளியிட்ட காவல்துறை
காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் பொகவந்தலாவ பொகவான கெசல்கமுவ ஆற்றில் இருந்து ஆணின் சடலம் இன்று (29) மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் பொகவந்தலாவ பொகவானை தோட்டப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75வயது கொண்ட பெரியண்ணன் கருப்பையா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் தீடீரென காணாமல் போன நிலையில் அவரை தேடும்போது குறித்த நபரின் சடலம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குறித்தப் புத்தகத்தில்
சம்பவ இடத்தில் உயிரிழந்த நபரின் பாதணிகள், குடை, மாதாந்த வைத்திய பரிசோதனை, புத்தகம் என்பன ஆரம்பகட்ட விசாரணையின் போது மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குறித்தப் புத்தகத்தில், ''வியாதி தாங்க முடியவில்லை, தனது முடிவுக்கு தானே பொறுப்பு, தனது மகன் மிகவும் நல்லவர், தன்னை அன்பாக பார்த்துக்கொள்வார், யாரையும் தண்டிக்க வேண்டாம்.'' என இறந்தவரின் கையெழுத்தில் இறப்பதற்கு முன்பே எழுதி வைக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






