இலங்கையில் தொடர் மின்வெட்டு! குப்பி விளக்குடன் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்
நாட்டில் தொடர் மின்வெட்டை எதிர்க்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, குப்பி விளக்கு ஒன்றை எடுத்து சென்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குப்பி விளக்கினை எடுத்துச் சென்றுள்ளார். எரிபொருள் இல்லாத காரணத்தினால், அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால், மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகி உள்ளமைக்கு எதிர்ப்பை காட்டும் விதமாக அத்தநாயக்க இவ்வாறு குப்பி விளக்கை எடுத்து வந்துள்ளார்.
கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
மக்களின் இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் அதே நேரத்திலேயே மின்சார நெருக்கடிக்கு தீர்வை தேட வேண்டும். மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து மின்சார நெருக்கடிக்கு தீர்வை தேடுவது வெற்றியை கொடுக்காது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் கூட்டு முயற்சிகள் இல்லை எனவும் அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.