மலையக மக்களுக்கு வடக்கு, கிழக்கில் நிலம்.....! மனம் திறக்கும் எம்.ஏ.சுமந்திரன்
மலையகத்தில் இருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராக உள்ளதாக தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மனோகணேசனும் மலையக மக்களும் அதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், அம்மக்களை மிகுந்த பாசத்துடன் மனதார வரவேற்பதற்குத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தள பதிவு ஒன்றிலேயே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் உறவுகளுக்கு அழைப்பு
அப்பதிவில் கூறியிருப்பதாவது, உங்களுடன் கடந்த வாரம் கண்டி, கம்பளைக்குச் சென்ற போது மலையகத்தில் இருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம்.

ஆனால் நீங்களும், அவர்களும் அதற்கான விருப்பத்தைத் தெரிவிக்கும் வரை பகிரங்கமாக அதனைச் சொல்வதைத் தவிர்த்திருந்தோம்.
இப்போது அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும் அதனை விரும்புவதாகச் சொல்கிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அரச காணி
இந்நிலையில் உங்களை மிகுந்த பாசத்துடன் மனதார வரவேற்கிறோம். ஏற்கனவே எம்மில் பலர் தங்கள் சொந்த நிலங்களைக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார்கள்.

அதேபோன்று அரச காணிகளையும் வாழ்விடங்களுக்கும், பயிர்ச்செய்கை மற்றும் தோட்டம் போன்றவற்றுக்கும் பெற்றுத்தர எம்மாலான முயற்சிகளை செய்துகொடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |