இலங்கை - மாலைத்தீவு இடையே 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
இலங்கை மற்றும் மாலைத்தீவு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்திடப்பட்டுள்ளன.
இதன்படி, மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு மற்றும் நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையில் நடைபெற்ற அரச தலைவர் சந்திப்பைத் தொடர்ந்து குறித்த ஒப்பந்தங்கள் இன்று (04.05.2026) கைச்சாத்திடப்பட்டுள்ளன.
அதன்படி, சுற்றுலா, கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், விளையாட்டு, இளைஞர் மேம்பாடு, ஆவணக்காப்பகம் மற்றும் பாதுகாப்புப் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்கட்டமைப்பு முதலீட்டு வாய்ப்பு
இது குறித்து உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 2025ஆம் ஆண்டு மாலைத்தீவிற்கு தாம் மேற்கொண்ட பயணத்தின் போது வழங்கிய அழைப்பை ஏற்று இச்சந்திப்பில் கலந்து கொண்டதற்காக மாலைத்தீவு ஜனாதிபதிக்கு நன்றிகளை கூறியுள்ளார்.

மேலும், டித்வா பேரழிவின் போது மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்கும், அதன்போது வழங்கப்பட்ட ஆதரவிற்கும் மாலைத்தீவு அரசாங்கத்திற்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவாலான உலகளாவிய காலநிலை மாற்றத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, கடல் வளம் , வேளாண் பதப்படுத்துதல், சுற்றுலா, நில விற்பனை மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய இணைந்து செயல்படுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு நாளை கலந்துகொள்ளவிருக்கும் வர்த்தகக் கருத்தரங்கு வெற்றி பெறும் என நம்புவதாகவும், அதற்காகத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 4 மணி நேரம் முன்